பாட்டியல் - நூற்பா எண் 3

79


 

விளக்கம்

  

         ‘யாப்புறச் செய்பா உறுப்பு எழுந்து இசைக்கும்’ என்பதனை மீண்டும்
  வலியுறுத்தவே, பாட்டு என வாளாகூறாது ‘ஓசை எழும் பாட்டு’ என்றார்.
  

         பாட்டு என்பது பால்பகா அஃறிணைப்பெயர் ஆதலான் அஃது
  ஒருமையையும் பன்மையையும் குறிக்கும்.
  

         ஆசு முதலியவற்றின் இலக்கணம் மேல் விரித்துக் கூறப்படும். கவி
  என்பது பாட்டினையும் பாடுவோனையும் குறிக்கும் சொல்லாம்; ஈண்டுப்
  பாட்டு என்னும் பொருளதாய் உரையில் கொள்ளப்பட்டுள்ளது. எனவே,
  கவி என்பது பாட்டு என்பதனோடு ஒருபொருட்கிளவி ஆகவும்,
  வேறுபொருட் கிளவியாகவும் வருமாறு உணரப்படும்.
  

ஒத்த நூற்பாக்கள்

  

         ‘ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் எனும்

         பாவகை பாடுவோன் கவிஎனப் படுமே.’

                                                                   - திவாகரம். 12-44

         ‘கவிகள்தாம்,

         ஆசு மதுரமே சித்திரம் வித் தாரமெனப்

         பேசுவார் நால்வருக்கும் பேர்.’                

- வெண். பா. செ. 1

  

         ‘ஆய்ந்தவல் ஆசு மதுரமும் சித்ர வித்தாரமுமே

         ஏய்ந்த கவி நான்கும்.’  

- நவநீத 85

  

         ‘ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம்

         ஏசில் கவிநான்கு இவை என்ப.’              

- தொல். வி. 299

  

         ‘ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம்

         ஆகும் நாற்கவி அறையுங் காலே.’         

- மு. வீ. யா. ஒ. 55