இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [பொது]3


     “ஆங்ஙன முரைப்பி னவற்றது வகையாற்
      பாங்குறக் கிளந்தன ரென்ப வவைதாம்
      வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
      யுட்குவரு சிறப்பி னுழிஞை நொச்சி
      முரண்மிகு சிறப்பிற் றும்பையுள் ளிட்ட
      மறனுடை மரபின வேழே யேனைய
      வாகோண் மரபின் வாகையுஞ் சிறந்த
      பாடாண் பாட்டொடு பொதுவிய லென்ப
      கைக்கிளை யேனைப் பெருந்திணை யென்றாங்
      கத்திணை யிரண்டு மகத்திணைப் புறனே”

எனப் பன்னிரு படலத்துப் புறத்திணை பன்னிரண்டெனக் கூறுபவாலெனின்,

    
“கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
     முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப”
       [தொல். அகத். 1]

எனக்கூறிய ஆசிரியர் தொல்காப்பியனார்க்குப் பிற்படக் கிளக்கப்படும்
புறத்திணை ஏழென்பதே கருத்தாகலானும், கரந்தையும் நொச்சியும் முறையே
வெட்சிக்கும் உழிஞைக்கும் மறுதலையாய் அவற்றின்பாற் படுமாதலானும்,
பொதுவியலென்பது,

      
  “பல்லமர் செய்து படையுட் டப்பிய
        நல்லரண் மாக்க ளெல்லாரும் பெறுதலிற்
        றிறப்பட மொழிந்து தெரிய விரித்து
        முதற்பட வெண்ணிய வெழுதிணைக்கு முரித்தே”
                                                   [பன். படலம்]

என அவர்தாமே கூறுபவாகலானுங், கைக்கிளையும் பெருந்திணையும்
புறமாயின் அகத்திணை ஏழென்னாது ஐந்தெனல் வேண்டுதலானும், பிரமம்
முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டினுள்ளும் யாழோர் கூட்டமாகிய
மணம் ஒன்றனையும் ஒழித்து ஏனைய ஏழும் புறமாதல் வேண்டுதலானும்,
முனைவனூலிற்குங் கலிமுதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர்
வழக்கிற்கும் இயையாமையானும் அங்ஙனங் கூறுதல் பொருந்தாதென
மறுக்க.                                                      (2)

                    
மறுதலைத் திணைகள்

     601. வெட்சியு முழிஞையும் வேற்றுவினை யுடைமையி
         னுட்குவரு கரந்தையு நொச்சியுஞ் சூடுத
         லவ்வினை மருங்கி னமைந்ததொல் வழக்கே.