சுவாமிநாதம்282அணியதிகாரம்
 
     உரை : பொருளும் குணமும் சிறப்பும் ஆன உண்மையை வேறு
ஒன்றால் மறுப்பது அவனுதிஅணி. வியக்கத் தக்க பெருமைக்குணங்களை
உயர்த்திக் கூறுவது உதாத்தஅணி. முன்னே இருக்கின்ற சொற்பொருளையும்
எழுத்து முறையையும் (சொல்லையும்) வரிசையாக நிறுத்திவைத்து அதன்
வரிசைமுறைப்படி பொருள் கொள்வது நிரனிறை அணி. முரண் தொடையைப்
பயன்படுத்துவது முரண் அணி. ஒரு பொருளைப் பழிப்பதற்கு இன்னொரு
பொருளைப் புகழ்வது மாறுபடு புகழ் அணி. ஒரு நிகழ்ச்சியின் குணங்களைப்
பிறிது ஒரு பொருளால் மறைத்துக் கூறுவது இலேசஅணி. ஒன்றனைப்
புகழ்வதுபோலப் பழித்தலும், பழிப்பதுபோலப் புகழ்தலும் இலேச அணியின்
பகுதியாகவே கொள்ள வேண்டும்.

     விளக்கம் : இது, தண்டியலங்காரம் 75, 74, 67, 83, 65, 66 ஆகிய
சூத்திரங்களைத் தழுவியது.

     பாட விளக்கம் : ‘பிற்புகழ்தல்’ (3வதுவரி) என்ற மூலபாடம்,
பிறபுகழ்தல் என்று திருத்தப்பட்டுள்ளது.

190. பொருள்ஆதி குறித்து,ஒருபால் நின்றொருசொல் பலபால்
     பொருள்தரிற்றீ பகம்;முன்பின் னிடைபொருந்து முன்னே
வருபொருட்சொற் பின்னும்வரிற் பின்னிலையாம்; மொழிஓர்
     வகைத்தொடர்பல் பொருள்தரிற்சி லேடையாம்; செஞ்சொல்,
பிரிசொல்லாய், ஒருவினை,பல் வினை,முரணும் வினையே,
     பின்னியமம், அநியமம்வி ரோதம்,அவி ரோதம்,
கருதுவதாம், வினைகுணத்தின் இருபொருட்கோர்,மொழியே
     காட்டிஉட னிகழ்வின்முடித் திடுதல்புணர் நிலையே.    [12]

தீபகம், பின்னிலை, சிலேடை, புணர்நிலை ஆகிய அணிகளை
விளக்குகின்றது.

     உரை : பொருள், குணம், தொழில், பண்பு, உறுப்பு ஆகியவற்றைக்
குறித்த ஒரு சொல் ஓரிடத்தில் நின்று பல