சுவாமிநாதம்181பொருளதிகாரம்
 

     விளக்கம் : இது நம்பி அகப்பொருள் 136, 137 (முதல் 11 வரி வரை)
ஆகிய இரண்டையும் அடியொற்றியது.

91. தலைவனையே வியத்தல்,தலை வியைவியத்தல், இறைக்குத்
     தலைவிநிலை கூறல்,இறை குறிச்சேறல், காண்டல்,
கலவிபுக ழுதல்,சகியோ டுஎய்துகெனல், பாங்கிற்
     கலப்பித்தல், அறுநான்கும் பாங்கற்கூட் டமதாம்;
இலகியமுன் னுறவுணர்தல், குறையுறவே யுணர்தல்,
     இருவருங்கூ டித்தலை வன்உற் றிடவுணர்தல், மூன்றாய்ச்
செலவுஒழுக்கம், உண்டி,மணம், பயிற்சியொடு, தோற்றம்,
     செயல்,மறைப்பு, இவ்வேழினுங்கண்டு ஐயம்முற்றோ ருதலே.
                                                [7]

இது பாங்கற் கூட்டத்தின் எஞ்சிய பகுதியும் பாங்கிமதி உடன்பாடும்
விளக்குகின்றது.

     உரை : 16. தலைவனை வியந்து கூறல், 17. தலைவியை வியந்து கூறல்,
18. பாங்கன் தலைவனுக்குத் தலைவியின் நிலையைக் கூறுதல், 19. தலைவன்
குறிவழிச் செல்லுதல், 20. தலைவியைக் காணுதல் 21. கலத்தல், 22. புகழுதல்,
23. தோழியோடு சேர்ந்து கொள்ளச் சொல்லுதல், 24. அவர்களோடு சேர்ந்து
விடுதல் ஆகிய இருபத்து நான்கு சிறு பிரிவும் பாங்கற் கூட்டம் என்ற
துறைக்கு உரியன.

     1. தோழி, வடிவு வேறுபாடு கண்டும் முன்னுறவுணர்தல் 2. தலைவன்
தன்னிடம் குறை யுற்று நிற்பதால் உணர்தல் 3. தலைவியும் தோழியும்
இருக்கும்போது தலைவன் வருவதால் உணர்தல் என மூன்று வகையும்
பாங்கி, கூட்டம் உணர்ந்து ஒத்துக்கொள்வதான பாங்கி மதி உடன்பாடு
ஆகும். இவற்றில் 1. நடை (ஒழுக்கம்), 2. உணவு, 3. மண (வாசனை)
வேறுபாடு, 4. பயிற்சி, 5. தோற்றம், 6. செய்கை, 7. மறைப்பு என ஏழு
வகைப்படும் தோழி முன்னுறவுணர்வு.

     விளக்கம் : இது 137 ஆம் சூத்திரத்தின் 12 ஆம் வரிமுதலுள்ள
வரிகளையும், 138, 139 ஆகிய சூத்திரங்களையும் தழுவியது.