சுவாமிநாதம்230புறத்திணை மரபு
 

     விளக்கம் : உழிஞைத்திணைக்குரிய துறைகளாகப் புறப்பொருள்
வெண்பாமாலை 29 துறைகளே சொல்லியுள்ளது. (சூத். 6). இவர் பல
துறைக்குக்கொடுத்த விளக்கமும், புறப்பொருள் வெண்பாமாலையிலிருந்து
வேறுபட்டுள்ளது.

     பாட விளக்கம் : ‘மேம்புடுத்தல்’ (3வது வரி) என்பது மூலபாடம்.
‘மகட்கேடகுமிகுல்’ (1வது வரி) என்பது மூல பாடம்.

137. தாங்குநெய்தற் புறம்தும்பை சமர்க்குஎதிர்வாம்;தும்பை
     தரித்தல்படைக்கு உதவுகொடை, ஒலிபடையை ஓம்பி
ஓங்கல்புரி தானைமற(ம்), மன்னனைஓம் படுத்தல்,
     உறுபடையின் மறஞ்சொலி எண் ணவர் அழிபுக்கு
                                           இரங்கல்
ஆங்,குதிரை மறம்ஆனை மறம்தூசி நிலைதார்
     ஆசைமொய்த்த வழிஒருவன் எறிதல்தேர் மறமே,
தூங்கல்எறிந்து இறந்தோர்க்குப் பாணர்கடன் கழித்தல்,
     துறைஇருவர் மாய்ந்தும்போர் அகலாப்போர் நிலையே [9]

இது தும்பைத்திணையின் விளக்கமும் அதற்குரிய துறைகளும்
விளக்குகின்றது.

     உரை : பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத நெய்தல்
திணைக்குப் புறம் தும்பைத்திணை. அது போர்க்குப் புறப்பட ஆயத்தம்
ஆதலாம். 1. தும்பைப் பூவால் ஆனமாலையை அணிந்து கொள்ளுதல், 2.
தம் போர் வீரர்களுக்குப் பரிசு அளித்தல், 3. படையைப் பாதுகாத்த
ஆற்றலைக் கூறும் தானை மறம் (படைவீரர்களின் வீரச் சிறப்பு), 4.
அரசனுக்கு உறுதி கூறுதல், 5. படையின் வீரத்தை உயர்த்திச் சொல்லி
பகைவர் அழிவுக்கு இரங்குதல், 6. குதிரையின் வீரத்தைச் சிறப்பித்துச்
சொல்லுதல், 7. யானையின் வீரத்தைச் சிறப்பித்துச் சொல்லுதல், 8. தூசி
நிலை, 9. தார்நிலை, 10. ஆசை மொய்த்த வழி ஒருவன் மேல் எறிதலாகிய
தேரின் வலிமையைச் சிறப்பித்துச் சொல்லும் தேர் மறம், 11. போரில்
இறந்தோர்க்குப் பாணர் இறுதிக் கடன் செய்தல், 12. போர்க் களத்தில்
இரண்டு அரசரும் இறந்த பின்னரும் போர் முடியாத போரின் நிலை.