சுவாமிநாதம்272அணியதிகாரம்
 

28. நுட்பம், 29. வாழ்த்து, 30. அதிசயம், 31. சங்கீரணம் என்ற
முப்பத்தொன்றும் செய்யுளுக்கு அலங்காரமாகக் கருதப்படும் பொருள்
அணியின் வகையாகும்.

     விளக்கம் : தண்டியலங்காரம் 28ஆம் சூத்திரத்தைத் தழுவியது
எனினும் அது முப்பத்தைந்து பொருள் அணிகள் சொல்லியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. ஒப்புமைக் கூட்டம், புகழாப்புகழ்ச்சி, ஆர்வமொழி, பாவிகம்
ஆகிய நான்கு அணிகளும் சேர்த்துக்கொள்ளப்பெறவில்லை.

180. அணியினில்எப் பொருளினு(ம்)மெய் விளக்குவது தன்மை
     அதுபொருள்ஆ கியஆறின் முடிவாந்; தன்மைக்
குணம்வெளியில் தோன்றமுடிப் பதுசுவை,முன் பொருளிற்
     கொண்டமெய்ப்பாடு எட்டும்அதாம்;பண்பு தொழிற்பயனிற்
பணிபொருளே பொருளோடு சேர்ந்துஒப்புமைதோன் றுறவே
     பலவாகி ஒன்றாகி வெளிப்படைஉள் ளுறையாய்த்
துணியும்விரி வாய்த்தொகையாய் அணிகள்பல வினுமே
     தோய்வதுவாய்ச் சொல்வதுவே உவமைஎன்னும் இதுவே.
                                                [2]

தன்மை, சுவை, உவமை அணிகளை விளக்குகின்றது.

     உரை : எவ்வகைப்பட்ட பொருளாலும் உண்மைப் பண்பை விளக்கிச்
செல்லுவது தன்மையணி. அந்தத்தன்மை பொருள் (Object) இடம், காலம்,
உறுப்பு (சினை), பண்பு (குணம்), தொழில் ஆகிய ஆறுவகையாகத் தோன்றும்.

     பண்பு வெளியே தெரியும்படி சொல்லுவது சுவையணி. அது எட்டு
வகை மெய்ப்பாட்டின் மூலம் (வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம்,
அவலம், உருத்திரம், நகை) வெளிப்படும், பண்புதொழில், பயன் என்பன
காரணமாக வரும் பொருளோடு பொருள்சேர்ந்து ஒற்றுமை தெரியும்படி
ஒரு பொருளோடும்பல பொருளோடும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்
(உள்ளுறை) உவமை உருபுகள் பயன்படுத்தியும், உவம உருபுகள்
பயன்படுத்தாதும் தொகையாகவும் வேறுபல அணிகளுடன் கலந்து வரும்படி
சொல்லுவது உவமையணி.