"ஏனோர் மொழிபொரு விகந்தொரு தனக்குத்
தானே பொருவெனத் தருமொழி யுயர்பே."
எனக் கொள்க.
"மதியேநின் வாண்முகத் திற்கொப் பதிதனான்
மற்றொன்றுண் டென்கை மயக்கு."
என இது நியமித்தமையால், நியமவுவமை.
"வேறுரைப் பதுபிழை யுவமை யிதுவெனத்
தேறிய பொருவுடைத் திறத்தது நியமம்."
எனக் கொள்க.
"தாமரைக் கொப்பாநின் வாண்முகமே நின்கரத்துக்
காமற்றொப் புண்டாயி னாங்கு."
இது அநியமவுவமை.
"உரிய வுவமை யொண்பொருட் கிதுகீழ்க்குப்
பொருவே றெனினா மநியம வுவமை."
எனக் கொள்க.
"ஏடலர் தார்ச்சந் திரன்ற னிருங்கொடைக்கு
நீடு மழையே நிகரென்னிற் -- கோடை
மறுக்கையினும் வக்கிரக்கோ ளுள்ளுந்தாம் பெய்யா
வொறுக்கையினு மாட்டாவே யொப்பு."
இஃது உவமையைத் தடுத்தலால், தடையுவமை.
"ஒப்பார் பொருவுக் கொருபிழை காட்டித்
தப்பு மென்பது தடைமொழி யுவமை."
எனக் கொள்க.
"நின்முகம் போல மலர்ந்த தரவிந்த
மன்னமே பாரா யது."
இஃது தெற்ற உவமித்தலால், தெற்றுவமை.
"பொருள்போ லமைந்த பொருவிது வென்னு
மரபொடு தெற்றி வருவது தெற்றே."
எனக் கொள்க.
"திருமேவிக் கடிகமழ்ந்து திங்களொடும் பகைத்தமையா
னுருமேவுந் தாமரையோ டொக்குநின் னொளிமுகமே."
இஃது இரண்டுஞ் சிலேடித்து வந்தமையால், சிலேடையுவமையாயிற்று.