இது காதலர்க்கு இரவுக்குறி அறியாமையை உணர்த்தினமையான், நுணுக்கம் என்னும் அலங்காரமாயிற்று.
"இங்கிதா காரத் தியல்குறி குறிப்பின்
உணர்த்துத னுணுக்க மென்மனார் புலவர்."
எனக் கொள்க.
"உன்னுயி ரோம்பு புளகத்தா லோங்கரசர்
கன்னிமேற் காதலுள னென்னாமல்--முன்னீர்க்
குளிர்காற்று வந்தசைப்பக் கூசினா னென்றா
ரளியாற்றுந் தண்டாரா னாங்கு."
இது ஒன்றினால் ஒன்றை மறைத்தமையால், இலேசு என்னும் அலங்காரமாயிற்று. இதனை இலேயம் எனினும் அமையும்.
"மறைந்த பொருண்மற் றொன்றி னிலக
வியம்புத லிலேசி னிலக்கண மாகும்."
எனக் கொள்க.
(11)
154. அடைவு, மகிழ்ச்சி, சுவை, ஊக்கம், பரியாய மொழி, துணைப்பேறு,
உதாத்தம், அவநுதி, சிலேடை, சிறப்பு, உடனிலைச்சொல், முரண்,
நுவலாச்சொல், தெரிவில் புகழ்ச்சி, சுட்டு
என்னும் அலங்காரமாமாறு
அடைவு மகிழ்ச்சி சுவையூக்க மாம்பரி யாயமொழி
அடைவு மலிதுணைப் பேறொடு தாத்த மவநுதியு
முடைவு நிகழுஞ் சிலேடை சிறப்பொ டுடனிலைச்சொற்
புடையின் முரணுவ லாச்சொற் புரிவில் புகழ்ச்சிசுட்டே.
(இ-ள்.) அடைவும், மகிழ்ச்சியும், சுவையும், ஊக்கமும், பரியாயமொழியும், துணைப்பேறும், உதாத்தமும், அவநுதியும், சிலேடையும், சிறப்பும், உடனிலைச்சொல்லும், முரணும், நுவலாச் சொல்லும், தெரிவில் புகழ்ச்சியும், சுட்டும் எனக் கிடந்த அலங்காரங்களும் உள (எ-று.)
அகலம் உரையிற் கண்டு கொள்க.
வரலாறு:-
"செவ்வாய் புகர்புந்தி திங்கட் கதிர்புந்தி
செவ்வாய்பொன் காரிசனி மந்த்ரிசெவ்வா--யெவ்வாயு
மேடமுத லீராறு வீட்டுக் கிறையென்று
நீடாய்ந்து சொன்னார் நிலத்து."