வரலாறு:-
"திருக்கிளர் தாமரையின் றேனொழுகச் சாலி
பருக்கு மிலந்தைப் பதியே--யிருக்கென்னு
நாமாலை யிட்டு நலங்கிளர்தார் மூவேந்தர்
பாமாலை யிட்டார் பதி."
எனவும்,
"தென்ற லுலவச் சிலைமாரன் போர்செய்ய
மன்றல் கமழு மருதூரே--கொன்றையினின்
மட்டாடுந் தொங்கலினார் வந்து மணஞ்செய்யப்
பட்டாரை யிட்டார் பதி."
எனவும் இவை இட வகையைப் புகழ்ந்த உதாத்தம்.
"அருமொழிதன் கோயி லடலரசர் மிண்டித்
திருமகட் குக்கொடிக டேய்த்த--பருமணிக
ளோதத் தமுதனைய வொண்ணுதலார் மென்மலராம்
பாதத்தி னூன்றும் பரல்."
இது செல்வத்தைப் புகழ்ந்த உதாத்தம்.
"செல்வ மாயினும் பதியே யாயினும்
வல்லிதிற் புகழும் வாய்மைய துதாத்தம்."
எனக் கொள்க.
அவநுதியென்னுமலங்காரமாவது,
ஒன்றை நாட்டி யஃததுவன்று இன்னதுபோல் நிகழ்வது என்பது.
"மாலைநீ யல்லை மணந்தா ருயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது."
என வரும்.
"அதுவோ வதுவன் றாயுங் காலை
யிதுபோ னிகழ்ந்த தெனுமவ நுதியே."
எனக் கொள்க.
சிலேடையாவது,
"செம்மை யுடையார் சிறியார்மேற் சொல்லுஞ்சொல்
வெம்மை யுடைய விறற்பகழி-தம் வன்மை
காலிட்டா னென்னாது காய்ந்தவர்மேற் பாய்ந்தனவே
மேலிட் டுயிர்போக மிக்கு."
இது செம்மையுடையார் சொல்லை அம்போடொக்கச் சிலேடித்தமையால், சிலேடையாயிற்று.