"புரந்தசொற் பொருவையும் பொருளையு மொன்ற
விரண்டையுஞ் சிலேடித் திசைப்பது சிலேடை."
எனக் கொள்க.
"திங்க ளனையதாற் றிங்களை யஞ்சுவிக்குந்
தங்குசெயல் தாமரைக்க ணுண்டென்று--செங்கட்
கருங்குழலி வாண்முகமே யென்னுங் கருத்தா
லொருங்கறிய லாக முணர்ந்து."
இது துணிவுவமை.
"அன்னது பொருவன் றெனவடை விளம்பி
யின்னது மெய்ப்பொரு ளென்பது துணிவே."
எனக் கொள்க.
இனி உம்மையுவமையாவது, 'இக்குணத்தாலே அன்றி, இக்குணத்தாலும் ஒக்கும்' என உம்மை இட்டு வருவது.
"செம்மையினாற் செந்தா மரையொக்கு நின்முகந்
தண்மையி னானுந் தனக்கு."
"இக்குறி யதனா லன்றி யிதனாலு
மொக்குமென் றிசைப்ப தும்மை யுவமை."
என்பதனால் அறிக.
"தாமரை போலுநின் வாண்முகங் கண்ணிணைக
ணீலோற் பலத்துக்கு நேர்."
இது பொருளுவமை.
"கருதிய பொருட்குக் காரணந் தவிர்த்துப்
பொருவை யியம்புதல் பொருளெனப் படுமே."
எனக் கொள்க.
"மண்ணாடு காத்தற்கு நீயுறங்காய் வானவர்கோன்
விண்ணாடு காத்தற்கு மேலுறங்கான்--நண்ணாதா
ரானவரைக் கொன்றா யனுபமனா நீயவனுந்
தானவரைக் கொன்றான் றடிந்து."
இது ஒப்புமை ஒக்கச் சொன்னமையால், ஒப்புமைக்கூட்ட உவமை.
"இப்படி யெனப்பொரு ளிரண்டுநற் பொருவுத
லொப்புமைக் கூட்டமென் றோதினர் புலவர்."
எனக கொள்க.