'நூறுடை வெள்ளிதட் டாமரைக் கோயி னுடங்கிடையே!' என்பது மகடூஉ முன்னிலை.
1. மரம் + அத்து + கு = மரத்துக்கு
(இதுவும் வேறு பிரதியில் உள்ள உதாரணமே.)
இந்நூலின் இவ்விதியின்படி மரம் என்பதன் ஈற்றில் உள்ள ஒற்றும் அதன் அயல் நின்ற அகர உயிரும் நீங்கின என்று கொள்ளுதல் வேண்டும்.
ஆசிரியர் தொல்காப்பியனாரும், நன்னூலாசிரியரும் மகரவொற்றின் அயலிலுள்ள அகரங் கெட்டது என்னாமல், அத்துச் சாரியையின் அகரங் கெட்டது என்பர்.
"அத்தின் அகரம் அகரமுனை யில்லை"
(தொல். எழுத்து --சூ. 125.)
(நன். எழுத்து ---சூ. 252.)
இது நன்னூலில் ஆசிரிய வசனமாகக் கொள்ளப்பட்டது.
மரம் + அத்து + இலை = மரத்திலை
இது பொருட்புணர்ச்சி
2. ஆன் + இன் + ஐ = ஆவினை
3. அவை + அற்று + ஐ = அவற்றை
(இவையும் வேறு பிரதியில் உள்ள உதாரணங்களே)
ஆன் + இன்+ கால் = ஆவின்கால்
அவை + அற்று + கோடு = அவற்றுக்கோடு
இந்நூலில் இவ்விதியின்படி, 'அவற்றை' என்பதில் நிலைமொழியின் ஈற்று உயிர்மெய் கெட்டு வகர உடம்படுமெய் தோன்றிற்று எனல் வேண்டும். வற்று என்பதே சாரியை எனக் கொள்ளின், வகர உடம்படுமெய் தோன்றிற்று எனல் வேண்டா.