உமையாள், தையலாள், தையலார் என நிற்குமென்றும்; இறைகடியன், இறை காக்கும், உமை அமர்ந்து விளங்கும், தையல் வரும் என அன்னீறும் ஆளீறும் பெறாது நின்றவற்றை அன்னீறும், ஆளீறும் என்னுஞ் சுப்பிரத்தியய முதலாயின வந்து லோபமாயின என்றும் கூறுவர். அன்றியும், கோ, வேள், பெண்டு என்னும் உயர்திணை இயற்பெயரும்; நாய், நரி, முதலிய அஃறிணை இயற்பெயரும்; அவன்,அவர்,அவள், அது, அவை என்பன போல ஒருமை ஈறும் பன்மை ஈறும் காட்டாது நின்று, பின் கள் ஈறு பெற்று, கோக்கள், வேள்கள், பெண்டுகள், நாய்கள், நரிகள் என வெகு வசனமானாற்போலவென்று கூறுவர்," என்று கூறியவற்றை ஈண்டு நோக்குக.
" 'சாத்தன் என்பது ஒருவனைக் கருதின சொல்,' என்பதன் கருத்து, சாத்தன் என்னும் ஓராடவனாகிய பொருளை உணர்த்தி நின்ற சொல் என்பதன்றோ?"எனின், சாத்தன் என்னும் பிரகிருதி ஆண்பால் என்னும் பாலைக் குறித்து நின்றதேயன்றி, அப்பெயரையுடைய ஓராடவனாகிய பொருளை உணர்த்தி நின்றதன்று என்பதே இந்நூலாசிரியர் போன்றார் கருத்தாகும்.
இது வடமொழிக்குரிய இலக்கணமானாலும், தமிழ்மொழிக்கும் உரியதாம் என்பதே இவர்கள் கருத்தாகும். இன்னோர் முதல் வேற்றுமையுருபுகள் என்று கூறியனவற்றுள் சு என்பது ஒழிந்த அர், ஆர் முதலியன தமிழ் இலக்கண நூற்களில் இறுதி நிலைகள், அல்லது விகுதிகள் எனப்படும்.
'சாத்தன் முதலிய பிரகிருதிகள் சு முதலிய முதல் வேற்றுமை உருபுகளோடு சேர்ந்த பின்பே பொருளை உணர்த்தும்; சேராத போது உணர்த்தா,' என்னும் இந்நூலாசிரியருடைய கொள்கை, அஃது, 'அன் முதலிய இறுதிநிலை உயர்திணை ஆண்பாலை உணர்த்துவனவாயிருப்பினும், பொன் என்பது முதலிய முதனிலையோடு சேர்ந்த பிறகே ஆடவன் முதலிய பொருள் உணர்த்தும்: அவை அம்முதனிலைகளோடு சேராத போது ஆடவன் முதலிய பொருளை உணர்த்தா,' என்று கொள்ளும் தமிழ் இலக்கண நூற்கொள்கையைப் போன்றதாகும். 'அன் முதலிய இறுதிநிலைகள் பொன் முதலிய முதனிலையோடு சேர்ந்த பின்பே ஆடவன் முதலிய பொருள்களை உணர்த்தும் என்பது தமிழ் இலக்கண நூற்கொள்கை என்பதை எதனாற் பெறுத