6. கிரியாபதப்படலம்1
71. படர்க்கை என்னும் பிரதம புருடனில் வரும் கிரியா
பதங்கள் இத்துணையாம் என்பது
ஒருவ னொருத்தி சிறப்புப் பலரொன் றொடுபலவை
மருவு படர்க்கை யொடுகால மூன்றையும் வைத்துறழத்
துருவ மலிபதி னெட்டாந் தொழிற்பதம்; தொல்கருத்தா
உருவ மலியும் பொருண்மேல் நிகழு மொளியிழையே!
(இ-ள்.) ஒருவனைக் கருதின சொல்லாதியான ஆறையும் வைத்து, இதன் முன் படர்க்கை என்னும் புருடனாய் உள்ள பிரதம புருடனை வைத்து, இதனோடு இறப்பு, எதிர்வு, நிகழ்வு எனும் முக்காலத்தையும் வைத்து உறழப் பதினெட்டுக் கிரியா பதமாம். இவை கருத்தாப் பொருளின்மேல் நிகழும் உருபுகள் எனக்கொள்க (எ-று.)
(1)
72. முன்னிலையினும், தன்மையினும் வரும் கிரியா
பதங்கள் இத்துணையாம் என்பது
முன்னிலை தன்மை யிடத்தினிற் காலங்கள் மூன்றையும்வைத்
துன்னு மொருமை சிறப்பொடு பன்மையு முய்த்துறழ்ந்தால்
பன்னுந் தொழிற்சொற் பதினெட் டுளகருத் தாப்பொருண்மேன்
மன்னி நிகழ்தொகை முப்பதொ டாறும் வகுத்தறியே.
(இ-ள்.) முன்னிலை, தன்மை என்னும் இரண்டிடத்தையும், மூன்று காலங்களையும், ஒருமை, சிறப்பு, பன்மை என்னு மூவகைச் சொல்லையும் வைத்துறழப் பதினெட்டுக் கிரியா பதமாம்; இருதிறமுங் கூடிக் கருத்தாப் பொருண்மேல் முப்பத்தாறு கிரியா பதமாம் (எ-று.)
இவையிற்றின்கண்ணுஞ் சிறப்பினை மூன்று வகைப்படுத்திக் கொள்க.
ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பதை வேறுபடுக்கவொண்ணாமையில் ஒருமை எனவும்; பலர், பல என்பதனை வேறுபடுக்க ஒண்ணாமையிற் பன்மை எனவுங் கொண்டான். சாத்தா நிற்பாய், மரமே நிற்பாய் எனவும்; நாங்கள் நிற்போம் எனவும்; பொன்காள்
1. இது கிரியா பதங்களைக் கூறும் படலம் என்றாம். கிரியா பதம் - வினைச்சொல்.