எழுத்ததிகாரம்12முத்துவீரியம்

(இ-ள்.) சார்பெழுத்து, உயிர்மெய் ஆய்தம் என இரண்டு வகைப்படுமென்க.

(வி-ரை.) உயிர்களோடும் மெய்களோடும் கூடியும் கூடாதும் அலி போலத் தனித்து
நிற்றலின் ஆய்தம் தனிநிலை எனப்பட்டது. உயிர்மெய் உயிரும் மெய்யும் கூடிப்
பிறத்தலானும், ஆய்தம் ஒரு மொழிக்கண்ணும் தொடர்மொழிக்கண்ணும் விதித்த முதல்
எழுத்துக்கள் இருமருங்கு நின்றெழுப்ப இருசிறகெழுப்ப எழும் உடலது போல்
இடையெழுத்து ஒலிப்பதன்றி ஒருவாற்றானும் முதலாகவோ அன்றி ஈறாகவோ வரும்
தன்மையதன்றாகலானும் இவையிரண்டும் சார்பெழுத்தாயின.

தொல்காப்பியர் சார்பெழுத்து மூன்று என்பர். நன்னூலார் பத்து என்பர்.
இத்திறமெல்லாம் அவ்வந் நூல்கொண்டு அறிக. (22)

சார்பு என்பதன் மறுபெயர்கள்

23. புல்லல் சார்தல் புணர்தல் சார்பெனலே.

(இ-ள்.) புல்லலெனினும், சார்தலெனினும், புணர்தலெனினும் சார்பென்னும்
ஒருபொருட்கிளவி. (23)

உயிர்மெய்

24. உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும்.

(இ-ள்.) பன்னிரண்டு உயிர்களும், பதினெட்டு மெய்களின் மேலும் ஏறி நடப்பது
உயிர்மெய் யாகுமென்க.

(வ-று) க் - அ=க, க் - ஆ=கா, க் - இ=கி, க் - ஈ=கீ, க் - உ=கு, க் - ஊ=கூ, க் -
எ=கெ, க் - ஏ=கே, க் - ஐ=கை, க் - ஒ=கொ, க் - ஓ=கோ, க் - ஒள=கொள பிறவுமன்ன. (24)

முற்றாய்தம்

25. தனிநிலை குறில்வலி தனக்கிடை வருமே.

(இ-ள்.) ஆய்தம் குற்றெழுத்துக்கு முன்னும் உயிரேறிய வல்லினத்துக்குப் பின்னும்
வரும்.

(வ-று.) எஃகு.

(வி-ரை.) வெஃகாமை, வஃகான் என்புழிப் பிறவுயிர் வரவு சிறுபான்மை வரும்.
தனிக்குறில் என வரைந்து ஓதாமையின் ‘விலஃஃகு வீங்கிருள் ஒட்டுமே மாதர், இலஃஃகு
முத்தின் இனம்’ எனவும் வரும். (25)