சொல்லதிகாரம்136முத்துவீரியம்

யொருமைக்கு முரியவாமென்க. மூன்றாவன: பன்மை யியற்பெயரும், பன்மைச்சினைப்
பெயரும், பன்மைச்சினை முதற்பெயருமாம்.

(வ-று.) யானைவந்தது, யானைவந்தன, யானை வந்தான்.

(வி-ரை.) மேல் (491) முதற்பெயர் முதலாகக் கூறப்பட்ட பொதுப் பெயர்கள்
அனைத்தும் ஒவ்வொன்றும் தத்தம் பால்களைக் குறிக்கும் என்றவர், ஈண்டுப் பன்மைப்
பெயர் மட்டும் பன்மையையே யன்றி ஒருமையையுங் குறிக்கும் என்றல் பொருந்தாதாம்.
491ஆம் நூற்பாவில் கூறப்பட்ட கருத்து நன்னூலாருடையது. இந்நூற்பாவில்
கூறப்படுவது தொல்காப்பியர் கருத்தாகும். இவ்விரண்டையும் ஒருங்கு ஏற்றது
பொருத்தமின்று.

பன்மைப் பெயர் பன்மையேயன்றி ஒருமையையும் குறிப்பதற்குச் சேனாவரையர்
ஓராற்றான் அமைதி கூறுவர். அது வருமாறு:

பன்மைக்கேயன்றி ஒருமைக்குமுரியவாய் வருவனவற்றைப் பன்மைப் பெயரென்ற
தென்னையெனின்: நன்று சொன்னாய்; பெண்மைப் பெயர் முதலாயினவும் பிற
பெயராலுணர்த்தப்படாத பெண்மை முதலாயினவற்றையும் உணர்த்தலானன்றே
அப்பெயரவாயின. என்னை? பெண்மை முதலாயின பிற பெயராலுணர்த்தப்படுமாயின்,
அப்பெண்மை முதலாயினவற்றான் அப்பெயர் வரைந்து சுட்டலாகாமையின், பன்மைப் பெயர்
ஒருமை யுணர்த்துமாயினும், பிறவாற்றாலுணர்த்தப்படாத பன்மையை ஒருகாலுணர்த்தலின்
அப்பன்மையான் அவை வரைந்து சுட்டப்படுதலின் அப்பெயரவாயின. அற்றேனும், பன்மை
சுட்டிய பெயரென்றமையாற் பன்மையே யுணர்த்தல் வேண்டுமெனின்: அற்றன்று;
இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலுமென விசேடித்தல் இருவகைத்து. வெண்குடைப்
பெருவிறல் என்றவழிச் செங்குடை முதலியவற்றோடு இயைபு நீக்காது வெண்குடையோடு
இயைபின்மை மாத்திரை நீக்கி வெண்குடையானென்பதுபட நிற்றலின் அஃதியைபின்மை
நீக்கலாம். கருங்குவளை என்றவழிச் செம்மை முதலாயினவற்றோடு இயைபு நீக்கலின், இது
பிறிதினியைபு நீக்கலாம். பன்மை சுட்டிய பெயரென்பது, வெண்குடைப் பெருவிறல்
என்பதுபோல, ஒருமையியைபு நீக்காது பன்மை சுட்டுதலோடு இயைபின்மை மாத்திரை
நீக்கிப் பன்மை சுட்டுமென்பதுபட நின்றது. அதனான் விசேடிக்குங்கால் பிறிதினியைபு நீக்கல்
ஒருதலை யன்றென்க.

அஃறிணை யொருமையும் அத்திணைப் பன்மையும் உயர்திணை யொருமையுமாகிய
பலவற்றையும் உணர்த்தலாற் பன்மை சுட்டிய பெயர் என்பாருமுளர். (தொல் - சொல் -
சேனா - 182) (37)

ஒருமைப் பெயர்

495. ஒருமையைக் குறித்த வொருமுப் பெயரும்
     ஒன்றற்கும் ஒருவர்க்கும் உரிய வாகும்.

(இ-ள்.) ஒருமையைப்பற்றி வருகிற மூன்றுபெயரும், அஃறிணை யொருமைக்கும்,
உயர்திணை யொருமைக்கு முரியவாம்.