சொல்லதிகாரம்140முத்துவீரியம்

எழுவாய் ஏனை வேற்றுமை ஏற்றல்

509. ஆற னுருபு மேற்குமவ் வுருபே.

(இ-ள்.) பெயராய் நிற்கின்ற எழுவாயுருபே ஐம்முதலாகிய ஆறு வேற்றுமை
யுருபுகளையும் ஏற்கும்.

(வ-று.) மரம், மரத்தை, மரத்தொடு, மரத்துக்கு, மரத்தின், மரத்தது, மரத்துக்கண்.

(வி-ரை.) அவ்வுருபு என்னும் சுட்டு எழுவாய் வேற்றுமையைக் குறிக்கும். இனி
அவ்வுருபு என்பதை ஆறாம் வேற்றுமை யுருபாக்கி ஆறாம் வேற்றுமை யுருபும்
ஆறனுருபுகளையும் ஏற்கும் எனக்கூறி சாத்தனது, சாத்தனதை, சாத்தனதால், சாத்தனதற்கு,
சாத்தனதனின், சாத்தனதனது, சாத்தனதன்கண், சாத்தனதே என எடுத்துக்காட்டுவர் சங்கர
நமச்சிவாயர். (52)

நீயிர், நீவிர், நான் என்பன பிறவுருபு ஏலாமை

510. நீயிர் நீவிர்நா னெழுவா யலபெறா.

(இ-ள்.) நீயிர் நீவிர், நான், எழுவாயல்லாத வேற்றுமை யுருபுகளைப் பெறாவாம்.

(வ-று.) நீயிர், வந்தீர், நீவிர் வந்தீர், நான் வந்தேன். (53)

எழுவாயுருபு

511. எழுவா யுருபு பெயர்தோன்று நிலையே.

(இ-ள்.) மேற்கூறிப்போந்த வேற்றுமை யுருபுகளுள் முதற்கட் பெயரென்று கூறப்பட்ட
வேற்றுமை யுருபாவது பெயர் தோன்றிய துணையாய் நிற்குநிலைமையா மெனவறிக.

(வி-ரை.) பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாவது உருபும் விளியும்
ஏலாது பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமையாம்.
(54)

அதன் பொருள்

512. வியங்கோள் வினைநிலை வினாவே பெயர்பண்(பு)
     அதன்பொரு ளென்மனா ரறிந்திசி னோரே.

(இ-ள்.) வியங்கோளும், வினைநிலையும், வினாவும் பெயரும், பண்பும் அதன்
பொருளாம்.