எழுத்ததிகாரம்15முத்துவீரியம்

(இ-ள்.) அசைச் சொல்லாகிய மியாவின் மகரமெய்யிலிருக்கிற இகரமும்
தன்மாத்திரையில் குறுகும்.

(வ-று.) கேண்மியா.

(வி-ரை.) இதுவும், மேலைய நூற்பாவும்,

‘‘யகரம்வரக் குறள் உத்திரி யிகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய’’ (எழுத் - 38)

என்ற நன்னூலைத் தழுவியன. (35)

குற்றியலுகரம்

36. நெட்டெழுத் திம்பருந் தொடர் மொழியீற்றுங்
    குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே.

(இ-ள்.) ஆகு என நெட்டெழுத்துக்கு முன்னும் எஃகு என ஆய்தம், வரகு என உயிர்,
கொக்கு என வலி, சங்கு என மெலி, தெள்கு என இடை, ஆகிய அறுவகைத்தொடர்
மொழியீற்றினும் வல்லினத்திலேறிய உகரம் தன் மாத்திரையில் குறுகுமென்றுணர்க.

(வி-ரை.) தொடர்மொழி என்றது ஆய்தம், உயிர், வலி, மெலி, இடைத்தொடர்க்
குற்றுகரங்களைக் குறிக்கும். (36)

ஐகார ஒளகாரக் குறுக்கம்

37. மொழிமுத லிடைகடை மூவிடத் தினும்ஐ
    அஃகு முதலிடத் தௌவு மற்றே.

(இ-ள்.) ஐகாரமொழிக்கு முதலினும் நடுவினும் கடையினும் தன் மாத்திரையில்
குறுகும் ஒளகாரமுதலில் குறுகும்.

(வ-று.) ஐப்பசி, மடையன், குவளை, ஒளவை எனவரும்.

(வி-ரை.)

‘‘தற்சுட் டளவொழி யைம்மூ வழியும்
நையு மௌவு முதலற் றாகும்’’ (எழுத்து - 40)

என்பது நன்னூல். (37)

மகரக்குறுக்கம்

38. மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும்.

(இ-ள்.) மகரமெய், மருண்ம் போன்ம் என ணகர னகரங்களுக்கு முன்னும், தரும்
வளவனென வகரத்துக்குப் பின்னும் தன் மாத்திரையில் குறுகுமெனவறிக