சொல்லதிகாரம்187முத்துவீரியம்

(இ-ள்.) கூர்ப்பென்பதும், கழிவென்பதும் ஒன்றனது மிகுதலாலாகிய குறிப்பை
யுணர்த்தும்.

(வ-று.) ‘துனிகூ ரெவ்வமொடு’ (சிறுபாண்-36) ‘கழிகண்ணோட்டம்’ (பதிற்-22). (38)

அதிர்வு, விதிர்ப்பு

681. அதிர்வும், விதிர்ப்பு நடுக்கப் பொருள.

(இ-ள்.) அதிர்வென்பதும், விதிர்ப்பென்பதும், நடுக்கமாகிய குறிப்பைத் தெரிவிக்கும்.

(வ-று.) ‘அதிர வருவதோர் நோய்’ (குறள்-429) ‘விதிர்ப்புற வறியா
வேமக்காப்பினை’ (புறம்-20) எனவரும். (39)

தீர்தல், தீர்த்தல்

682. தீர்த றீர்த்தல் விடற்பெயர்க் கிளவி.

(இ-ள்.) தீர்தலென்பதும், தீர்த்தலென்பதும் ஆகிய இரண்டும், விடுதலாகிய குறிப்பைத்
தெரிவிக்குமென வறிக.

(வ-று.) ‘துணையிற்றீர்ந்த கடுங்கண் யானை.’ (நற்-108)

(வி-ரை.) தீர்தல் தன் வினையாகவும், தீர்த்தல் பிறவினையாகவும் வரும் என்பர்
இளம்பூரணர். இதனைச் சேனாவரையர் மறுப்பர். பின்னர் வந்த நச்சினார்க்கினியர் இவரை
மறுத்து இளம்பூரணர் கருத்தே வலியுடையது என்பர். ‘கங்கையைச் செற்ற தீங்கு தீர்த்து நீர்
கொண்மின்’ (சிந்தாமணி - 1275) என்ற விடத்துத் தீர்த்தல் என்பது விடற்பொருட்டாய்
வந்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (40)

பெருமைப் பொருளில் வருவன

683. தடவொடு கயநளி பெருமைப் பொருள.

(இ-ள்.) தடவும், கயவும், நளியும், பெருமையென்னும் பண்பைத் தெரிவிக்கும்.

(வ-று.) ‘வலிதுஞ்சு தடக்கை’ (புறம்-394) ‘கயவாய்ப் பெருங்கண்யானை’
(அகம்-148) ‘நளிமலைநாடன்’ (புறம்-150) (41)

பிணை, பேண்

684. பிணையும் பேணும் பெட்பா கும்மே.