சொல்லதிகாரம்208முத்துவீரியம்

அத்தன்மையன வெல்லாம் அவ்வப்பொருளியல்பான் இத் தன்மையவென்றுரைக்கும்
குறிப்புச்சொல்லாம்.

(வ-று.) அந்நெறியீண்டு வந்துகிடந்தது; அம்மலையிதனோடு வந்து பொருந்திற்று;
அவலவலென்கின்றன நெல்; மழை மழையென்கின்றன பைங்கூழ்.

(வி-ரை.) அவல் அவல் என்கின்றன நெல் - நெல் பள்ளம் (தாழ்ந்த பகுதி)
வேண்டும், பள்ளம் வேண்டும் என்று கூறுகின்றது. அவல் பள்ளமாதல், ‘அவலா கொன்றோ
மிசையா கொன்றோ’ (புறம் - 187) என்பதனானும் அறிக. ‘வெள்ளமே யானாலும் பள்ளமே
பயிர் செய்’ என்ற பழமொழியும் ஈண்டு அறியத்தக்கது. (தொல் - சொல் - சேனா - விளக்க
- 422). (106)

ஒருசொல் அடுக்கிற்கு வரையறை

749. விரைவு மூன்றிசை நிறைநான் கடுக்கே.

(இ-ள்.) மேற்கூறிப்போந்த (735) ஒருசொலடுக்கினுள் விரைவுப்பொருள்பட
அடுக்குவது மூன்று வரம்பையுடைத்து, இசை நிறையடுக்கு நான்காகிய வரம்பையுடைத்தாம்.

(வ-று.) தீத்தீத்தீ, விரைவு; பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ நாமகள், இசைநிறை.
(107)

பத்துவகை எச்சங்கள்

750. 1 பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
       எதிர்மறை யும்மை எனவே சொல்லே
       குறிப்பே யிசையே யாயீ ரைந்தும்
       நெறிப்படத் தோன்று மெச்சச் சொல்லே.

(இ-ள்.) பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம்,
எதிர்மறையெச்சம், உம்மையெச்சம் என வெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம்,
இசையெச்சம் ஆகிய பத்தும் எச்சப் பொருண்மையைத் தருமொழியாம். (108)

இதுவுமது

751. தத்தமெச் சத்தொடு சார்ந்துநின் றியலும்.

1. தொல் - சொல் - எச்ச - 34.