பொருளதிகாரம்231முத்துவீரியம்

மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே’’ (தொல் - களவு - 1)

என்றாராகலின்.

(வி-ரை.) யாணம் - அன்பு; கலி - பெருக்கம். தலைவன் தலைவியரின் அன்பு
பெருகுதற்குரிய விழாவினைக் கலியாணம் என்றனர். ‘கலிமகிழ் சுற்றம்போற்றக் கலியாணம்
செய்தார்கள்’ என்ற சேக்கிழார் வாக்கும் நினைக.

பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங்
காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து
இரண்டாம்பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது.

பிரசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டித்
தம்மகட்கு ஈந்து கொடுப்பது.

ஆரிடமாவது: தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப்
பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற்
பொலிந்து வாழ்வீரென நீரிற் கொடுப்பது.

தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒத்த ஒருவற்கு அவ்வேள்வித்
தீ முன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது.

ஆசுரமாவது: கொல்லேறு கோடல் திரிபன்றி யெய்தல் வில்லேற்றுதல் முதலியன
செய்துகொடல்.

இராக்கதமாவது: தலைமகள் தன்னினுந் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது.

பைசாசமாவது: மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும் இழிந்தோளை
மணஞ்செய்தலும் ஆடைமாறுதலும் பிறவுமாம்.

இனிக் கந்தருவமாவது: கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு
இயைந்தது போலத் தலைவனுந் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது. (2)

3. தலைமகனுக்குரிய குணம்

831. 1 பெருமையு முரனு மாடூஉ மேன.

என்பது, அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும்
பழிபாவக் கஞ்சல் முதலியனவாய மொழி மேற்படும் பெருமைப்பகுதியும் கடைப்பிடியும்
நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியினது பகுதியுந் தலைவ னிடத்ததாம். (3)

1. தொல் - பொருள் - களவி - 7.