எழுத்ததிகாரம்30முத்துவீரியம்

(இ-ள்.) குற்றியலிகரத்துக்கும், குற்றிய லுகரத்துக்கும், ஆய்தத்துக்கும், மெய்க்கும்,
தனித்தனி யரைமாத்திரையாம்.

(வ-று.) நரகியாது, நாகு, ஃ, க். (101)

கால் மாத்திரை பெறும் எழுத்துக்கள்

102. அஃகிய மகரமு மாய்தமுங் காலே.

(இ-ள்.) மகரக்குறுக்கத்துக்கும், ஆய்தக்குறுக்கத்துக்கும் தனித்தனி மாத்திரை காலாம்.

(வ-று.) போன்ம், கஃறீது.

(வி-ரை.)

‘‘மூன்றுயி ரளபுஇரண் டாம்நெடில் ஒன்றே
குறிலோடு ஐஒளக் குறுக்கம் ஒற்றளபு
அரைஒற்று இஉக் குறுக்கம் ஆய்தம்
கால்குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை’’ (எழுத் - 44)

என்ற நன்னூலார் கருத்தை 99 முதல் இந்நூற்பா வரையிலுள்ள நூற்பாக்களில் காணலாம்.
(102)

ஓரெழுத்து மூன்று மாத்திரை பெறாது

103. ஓரெழுத் தொருமூன் றொலிப்ப தின்றே.

(இ-ள்.) ஓரெழுத்து மூன்று மாத்திரை யாகாவாம்.

(வி-ரை.)

‘‘மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே’’ (நூன்-5)

என்பது தொல்காப்பியம். (103)

உயிரள பெடைக்குரிய மாத்திரை

104. அளபெடை மூன்றன்மே லாமென மொழிப.

(இ-ள்.) உயிரளபெடை மூன்று மாத்திரையே யன்றி நான்கு மாத்திரையுமாகும்.

(வ-று.) ஓ ஒதல், பதா அ அகை. (104)

மாத்திரை அளபிறந்து ஒலிக்கும் இடம்

105. விற்கை புலம்பிசை விளியினு மிகுமே.