எழுத்ததிகாரம்37முத்துவீரியம்

(இ-ள்.) ஆரியவுயிர் பதினாறனுள் நடுவிலிருக்கு நான்குயிருங் கடையிலிருக்கு
மிரண்டுயிருமல்லாத பத்துயிரும் ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொதுவெழுத்தாமென்க.

(வி-ரை.) ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவாகிய எழுத்துக்கள்:- அ, ஆ, இ, ஈ, உ,
ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன. (11)

ரு-இகரமாகவும் இருவாகவும் திரிதல்

126. அவற்றுள்,
     ஏழா முயிரிய்யு மிருவு மாகும்.

(இ-ள்.) மேற்கூறியவற்றுள் ஏழாமுயிராகிய ரு-இகரமாக வானாலும்,
இருவாகவானாலுந் திரியும்.

(வ-று.) இடபம், இருடி எனவரும்.

(வி-ரை.) நன்னூலார் பதவியலுள் தொகுத்துக் கூறியுள்ள கருத்தை இவ்வாசிரியர் 126 முதல் 135 வரையுள்ள நூற்பாக்களால் தனித்தனியே எடுத்துக் கூறியுள்ளார்.

‘‘அவற்றுள்,
ஏழாமுயிர் இய்யும் இருவும்ஐ வருக்கத்
திடையின் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வு முப்பது சயவும்
மேலொன்று சடவு மிரண்டு சதவும்
மூன்றே யகவும் ஐந்திரு கவ்வும்
ஆவீ றையு மீயீ றிகரமும்’’

என்பது நன்னூல் (பதவி - 20) இவற்றுள் ‘ஐ வருக்கத்து இடையில் மூன்றும் அவ்வம்
முதலாகும்’ எனக் கூறியதை மட்டும் இவ்வாசிரியர் கூறவில்லை. ஏனைய ஒத்துள்ளன. (12)

மெய்யில் தமிழுக்கும் வடமொழிக்கும் உரிய பொதுவெழுத்துக்கள்

127. ஐந்து வருக்கத் தாதியு மந்தமும்
     யரல வளக்களும் பொதுவெழுத்தாகும்.

(இ-ள்.) ஆரியமெய் முப்பத்தேழனுள், ககரமுதலைந்து வருக்கங்களின்
முதலிலிருக்கின்ற க, ச, ட, த, ப க்களுங் கடையிலிருக்கின்ற ங, ஞ, ண, ந, ம க்களும், ய,
ர, ல, வ, ள க்களும் இருமைக்கும் பொதுவெழுத்தாகும். (13)