பொருளதிகாரம்382முத்துவீரியம்

காணுந் திசைதொறும் கார்க்கய லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. (திருக். 341)

நெஞ்சொடு நோதல்

என்பது, மீள நினைந்த தலைமகன், பின்னும் பொருண்மேற் செல்லா நின்ற
உள்ளத்தனாய் நின்று மீளமாட்டாது, இவ்விரண்டனுள் இப்பொழுது நீ யேதுக்குப்போக
முயல்கின்றாயெனத், தன் நெஞ்சொடு நொந்து கூறல்.

(வ-று.)

பொன்னணி யீட்டிய வோட்டரு நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப தேயிமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக ரன்னவன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. (திருக். 342)

நெஞ்சொடு புலத்தல்

என்பது, நெஞ்சொடு நொந்து கூறா நின்றவன், பேயிடத்துஞ் செய்தலரிதாம் பிரிவை
இவளிடத்தே யெளிதாக்குவித்துச் சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நினது சிக்கனவுக்கு
அஞ்சத் தக்கதெனப், பின்னுமந் நெஞ்சொடு புலந்து கூறா நிற்றல்.

(வ-று.)

நாய்வயி னுள்ள குணமுமில் லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும் பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத் தக்கதுன் சிக்கனவே. (திருக். 343)

(கு-ரை.) சிக்கனவு - இரக்கம் இல்லாமை.

நெஞ்சொடு மறுத்தல்

என்பது, நெஞ்சொடு புலந்து கூறிப் பின்னும் பொருண்மேற் செல்லா 
நின்ற வுள்ளத்தோடு தலைமகளை நினைந்து, இத்தன்மைத்தாகிய பொன்னை விட்டு வேறு
பொன் தேடியோ எம்மை வாழச் செய்வது, இதற்கு யாமுடம்படேம், நாமே நடக்கவெனச்,
செலவுடம்படாது பொருள் வலித்த நெஞ்சொடு மறுத்துக் கூறல்.