அணியதிகாரம்539முத்துவீரியம்

(வ-று.)

தம்மாற் பயன்றூக்கா தியாவரையுந் தாங்குகினுங்
கைம்மாறுங் கால முடைத்தன்றே-யெம்மாவி
அன்னவனை யாழி யனபா யனைமலராண்
மன்னவனை மானுமோ வான். (தண்டி-மேற்) (75)

விபாவனையணி

1229. ஒன்றன் வினையறிந் துரைக்குங் காலை
      உலகறி காரண மொழித்துப் பிறிதொரு
      காரண மியல்பினுங் குறிப்பினும் புலப்படல்
      விபாவனை யென்மனார் மெய்யுணர்ந் தோரே.

என்பது, ஒன்றனது தொழிலைக்கண்டு கூறுங்காற் பலருமறியுங் காரணத்தை நீக்கி
வேறொரு காரணமாக இயல்பினானும் குறிப்பினானும் தோன்றல் விபாவனையணி.

(வ-று.)

தீயின்றி வேந்தமியோர் சிந்தை செழுந்தேறல்
வாயின்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்-வாயிலார்
இன்றிச் சிலரூட றீர்ந்தா ரமரின்றிக்
கன்றிச் சிலைவளைத்த கார். (தண்டி-மேற்) (76)

ஒட்டணி

1230. எண்ணிய பொருண்மறைத் தேயது புலப்பட
      வேறொரு பொருளை விளம்புவ தொட்டே.

என்பது, கருதிய பொருளைத் தொகுத்து மற்றது வெளிப்படுத்தற்கு வேறொன்றைக்
கூறல் ஒட்டணி.

பிறிது மொழியணியெனினும், சுருக்கணியெனினு மொக்கும்.

(வ-று.)

வெறிகொளி னச்சுரும்பர் மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுக் குறுகு-நிறைமதுச்சேர்ந்
துண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு. (தண்டி-மேற்) (77)