எழுத்திலக்கணம்038
அவ்வரை இடம்சாய்த்து அதனொடு ணுண்ணூப்
 பிற்குறி இசைக்கில் துகரமும் தூவும்
 துலங்கும்; மற்றைய பொறி எலாம் முதற்சொல்
 வருக்கம் போலும் நிலைகொடு வயங்கும்.
 மேற்பல் உட்புறத்து அடியின் நாஒன்ற
 ஒலிப்பன வாம்என்று உரைத்திடத் தகுமே.
சகர உயிர்மெய்யின் கடைசியில் வரையும் கோட்டைச் சிறியதாக்கிக் கீழே இழுத்தால் தகரத்தின் வரிவடிவம் ஆகும். கீழே இழுக்கும் கோட்டை இடப்புறமாக வளைத்து அதனுடன் ணுகர ணூகாரங்களுக்குரிய ஈற்றுச் சின்னத்தைப் பொருத்தினால் முறையே துகர தூகாரம் தோன்றும். (தகர வருக்கத்தின்) பிற உயிர்மெய் வடிவங்கள் எல்லாம் இந்நூற்பா முதலில் சொல்லப்பட்ட சகர வருக்கத்தின் வரி வடிவக் குறிகளையே பெறும். மேற்பல்லின் உட்பாகத்தில் நாக்கின் நுனி சென்று பொருந்தினால் தகர வருக்க உயிர் மெய்கள் ஒலிக்கும் என்றவாறு
மற்றைய என்றது தா, தி, தீ, தெ, தே, தை, தொ, தோ, தௌ என்பனவற்றை.
(24)
நகர வருக்கம்
25.ஙகரத்து ஈற்று நிலைவரை யுடன்அதன்
 அடிதொடும் இடத்துக் கிடைவரை தவிரவும்
 நகரம் தோன்றும்; நாமுதற் பிறஞா
 முதலின போன்றே மொழிதரும் நிலையின.
 தகரந் தோன்றிய தானத்து உட்புறம்
 மெல்லென நுனிநாத் தொடும்ஒலி யினவே.
ஙகர வரிவடிவின் கடைசியில்உள்ள குத்துக்கோடும், அதன் அடிப்புறமிருந்து (வலப்புறம் வரும்) படுக்கைக்கோடும் நீக்கப்பட்டு விட்டால் ந எனும் எழுத்து ஆகும். நா முதல் நௌ வரையான மற்ற உயிர்மெய்யெழுத்துகள் பதினொன்றும் ஞா. முதலியவற்றின் துணைக் குறிகளையே பெறும். தகரம் தோன்றும் இடத்திற்கும் சற்று உட்பக்கமாக (மேற்பல்லின் உட்புறம்) நா நுனி மென்மையாகத் தொடுவதால் நகரவோசை பிறக்கிறது என்றவாறு.