சொல்லிலக்கணம்138
இவை, அவை, எவை முதலியனவும், இவற்றோடு விகுதிமேல் விகுதியாகக் கள் சேர்ந்த சொற்களும் அஃறிணைப் பன்மைச் சுட்டுச் சொற்கள் ஆகும். இவைகளுக்கும் எடுத்துக்காட்டுகள் கூறினால் அது (கூறுபவர், படிப்பவர் ஆகிய இருபாலாருக்கும்) இழிவாகும் என்றவாறு.
இதுவரை நடந்த 188 நூற்பாக்களில் பற்பல முறை எழுத்துகள், சொற்கள், இவை, அன்னவை என்பன போன்றவை பயின்றிருத்தலின் இங்கே இவைகட்கு உதாரணம் இயம்பல் இழிவே என்றார். இஃதேயன்றி அஃறிணையில் வருகின்ற சொற்கள் இழிவானவை என்பது கருத்தன்று.
(189)
25.இன்னான் இன்னாள் இன்னதுஎனல் ஆதிய
 குறிப்புச் சுட்டுச் சொல்எனல் குணமே.
இன்னான் இன்னாள் இன்னது முதலிய சொற்களைக் குறிப்புச் சுட்டுச் சொல் எனக் கூறுதல் தக்கதாம் என்றவாறு.
இச்சொற்களால் பொருள் வெளிப்படையாக விளங்காமல் கூறுபவர் குறிப்பைக் கொண்டே உணர வேண்டிஇருத்தலின் குறிப்புச் சுட்டுச் சொல் எனப்பட்டது.
(190)
26.அங்ஙனம் அந்த அங்குஎனல் ஆதிய
 மொழி, பொது, வயின்எனும் மூவகைச் சுட்டே.
அங்ஙனம், அந்த, அங்கு என்பன போன்ற சொற்கள் முறையே கூற்று, பொது, இடம் என்பனவற்றைச் சுட்டும் மூவகைச் சுட்டுகளாம் என்றவாறு.
ஆதிய என்றது இங்ஙனம், இந்த, இங்கு, எங்ஙனம், எந்த, எங்கு என்ற மற்றவற்றை, அங்ஙனம் உரைத்தான் எனப்பெரும்பான்மை மொழிபற்றி வருதலாலும், அந்த மனிதன், அந்தப்பசு, அந்த நாள், அந்தக் கருத்து எனப்பொதுவாக அனைத்துப் பொருள் பற்றியும் வருவதாலும், அங்கு என்பது இடம் பற்றியே வருவதாலும் இவ்வாறு கூறப்பட்டது. இது இங்ஙனம் முதலிய மற்ற சொற்களுக்கும் பொருந்தும்.