சொல்லிலக்கணம்148
பிறக்கும், பேசும், பிணங்கும் என்பதைப் போன்ற சொற்கள் (எச்சமாகவும் முற்றாகவும்) எதிர்காலத்தைக் காட்டும் என்றவாறு.
(212)
48.சொல்லி நின்று வந்துஎனல் ஆதிய
 மற்றும்ஓர் வினையை வருவிக்கும் ஆதலின்
 வினையெச்சம் ஆம்என விளம்பிடல் இயல்பே.
சொல்லி, நின்று, வந்து என்பனவற்றைப் போன்ற சொற்கள் தம் பொருளை முற்றுவிக்க வேறு ஒரு வினைச் சொல்லினை வேண்டி நிற்கும் ஆதலின் இத்தகையவை வினையெச்சம் எனக் கூறப்படும் என்றவாறு.
(213)
49.ஈகை ஆதிய நல்வினை; ஏற்கை
 ஆதிய தீவினை அறிஞராம் அவற்கே.
பிறருக்கு அளித்தல் முதலியன நல்வினைகளாம். பிறரிடம் ஏற்றல் முதலியன தீவினைகளாம். இவற்றை அறிஞர்கள் அறிவர் என்றவாறு.
நல்வினை, தீவினை என்பன பொருளுலகில்தான் உண்டு. இலக்கணமாகிய சொல்உலகில் (சப்தப்பிரபஞ்சம்) வினைச்சொற்களில் நல்லவை, தீயவை என்ற பாகுபாடு கிடையாது. இலக்கணப் பிழையில்லாமல் ஆளப்பட்டால் கொல்லுதலும், கொன்றதைத் தின்னுதலும் கூட நல்ல வினைச்சொற்களே. இவர் இலக்கணத்தோடு நீதியும் புகட்டுவான் வேண்டி இந்நூற்பாச் செய்தார்.
(214)
50.வினைச்சொல்இவ் வண்ணம் விளம்பினம் இனிப்பாத்
 தொறும்ஒரு வகைச்சொற் சொல்லுதல் அன்றே.
வினைச்சொற்களைப்பற்றி இதுகாறும் சொன்னோம். இனித் தொடர்ந்து நூற்பாவுக் கொன்றாகப் பலவகைச் சொற்களைப் பற்றிக் கூறுவாம் என்றவாறு.