அறுவகையிலக்கணம்197
பதிக்கப்பெற்ற குழைகள், செம்பொன்னாலாகிய காதோலைகள் போன்ற பூண்களின் அசைவும், அவைகளின் மாற்றமும் செயற்கைப் புனைவுகளாம் என்றவாறு.
செயற்கையாக இட்டதொளை நாளடைவில் பெரிதாதலின் இயற்கை நேர் செயற்கை என்றார். காதணி பருவத்திற் கேற்ப அவ்வப்போது மாற்றப்படுதலின் மாறலும் என்றார்.
(290)
14.கவின்திகழ் அகல்முகக் கன்னி கமுகுஉறழ்
 மிடற்றுஎழும் மென்குரல் இயற்கை; வேறு எல்லாம்
 செயற்கை யாம்எனச் செப்பிடல் இயல்பே.
அழகுமிகுந்தும் அகன்றும் உள்ள முகத்தை உடைய நங்கையின் பாக்கு மரத்தின் மேற்பகுதியைப் போன்ற கழுத்தில் உண்டாகும் இனிய மென்குரல் இயற்கையாகும். மற்றவை அனைத்தையும் செயற்கையானவை எனக் கூறலே தக்கதாம் என்றவாறு.
வேறு எல்லாம் என்றது, “வாய்வெருவி நாடும் மிடறூடு மயில் காடை குரலோசை தர”1 என்றதைப் போன்று புட்குர லெழுப்புதலை.
(291)
15.கொன்றுஉயிர் தரும்விழிக் கோதை முலைக்குக்
 குளிர்ச்சியும் வெப்பமும், குன்றுஎனப் பொதுமி
 இடம்அறிந்து அரும்போர் இயற்றலும் இயற்கை;
 பூணும், களபமும், பொறித்தசித் திரங்களும்
 செயற்கை யாம்எனத் தெளிவது முறையே.
பொதுநோக்கால் நோய்தந்து உயிரை மெலிவித்த பிறகு தானே சிறப்பு நோக்காகிய மருந்தால் அவ்வுயிரை உய்விக்கும் கண்களை உடைய பூமாலையைப்போன்று அழகு வாய்ந்த தலைவியின் நகில்களுக்குக் (கோடையில்) குளிர்ச்சியும், (குளிர் காலத்தே) வெம்மையும், குன்றுகளைப்போற் பணைத்தெழுந்து