அறுவகையிலக்கணம்223
60.பசும்புல் பற்றாப் பாலையிற் பல்பேய்
 திரிவன; விருந்துஎனத் திருடர்வந்து அகல்வார்;
 கிடப்பன உடைதலை ஆதிய; கிளத்தரும்
 இந்நிலத் தெய்வம் இலங்குஇரு பிறைஎயிற்று
 அகல்வாய்க் காளிஎன்று அறைந்திடத் தகுமே.
பசுமையான புல்லும் கூட முளைக்காத வெப்பம் மிக்க பாலை நிலத்தே பல பேய்கள் திரிந்து கொண்டிருக்கும். வழிப் போக்கர்களை ஆறலைப்பதற்காக அவ்வப்பொழுது கள்வர் வந்து நிலையாகத்தங்கி இராமல் திரும்பிப போய்விடுவர். வழிப்பறிக்காரர்களால் கொலையுண்ட வழிப்போக்கர்களின் உடைந்த தலை முதலிய உறுப்புகள் ஆங்காங்கே கிடக்கும். சொல்ல முடியாத கொடுமையை உடைய இப் பாலை நிலத்துக்குரிய தெய்வம் பிரகாசிக்கின்ற இரண்டு பிறைமதிகளைப் போன்ற கோரைப்பற்களையும் அகன்ற வாயையும் உடைய காளியாவாள் என்றவாறு.
பேய் திரிவன என்பதாலும், திருடர் வந்து அகல்வார் என்பதாலும் இந் நிலப்பகுதியில் நிலையான மக்கள்வாழ்க்கை இல்லை என்பது பெறப்பட்டது.
(337)
61.வாழையும் தென்னையும் மலிவுறும் மருதத்து
 அந்தணர் முதற்சிலர் அமர்தலும் அன்றி
 மள்ளர்ஆ தியரும் வயல்சார்ந்து இருப்பதுஉண்டு;
 அவர்அயன் ஆதியர்ப் பரவல்கண்டு இவர்தம்
 இந்திரன் ஆதியர்க்கு இனியசெய் குவரே.
வாழையும் தென்னையும் மிக அதிகமாக வளரும்படி நீர் வளம் மிக்க மருதநிலத்தில் வேதியர்முதலிய சில வகுப்பாருடன் உழவர்களும் வயல்களுக்கு அருகே வசிப்பர். அவ்வந்தணர்கள் பிரமன் முதலிய தெய்வங்களை வழிபடுவதைப் பார்த்து, இந்த உழவர்களும் இந்திரன் முதலிய தெய்வங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பூசனை புரிவர் என்றவாறு.