யாப்பிலக்கணம்354
“குராங்கழல் சூட்டிக் கவுமாரர் தம்மொடு கூட்டி அப்பால்
 நிராஞ்சன நின்மல ஞானானு பூதி நிறைத்தருள்வாய்
 கராங்குலி கொண்டு மலரோன்றன் சென்னி கவர்ந்துவக்கும்
 புராந்தகன் பெற்ற மகனே! குமார புரிக்கந்தனே”1
இக்கவியில் எதுகை “தனாந்தன” என்னும் சந்தக் குழிப்பில் அமைந்து வண்ண எதுகை ஆயிற்று. இவ்வாறே அபிராமி அந்தாதியில் வரும் சின்னஞ்சிறி, பென்னம்பெரி, கன்னங்கரி, தன்னந்தனி என்ற எதுகை “தன்னந்தன” என்ற சந்தத்தில் வந்த வண்ணஎதுகையாம்.
வண்ணப்பாடல்களில் வரும் எதுகைகள் வண்ணம்பெற்றே வருமாதலின் அங்கே இதனைக் கொள்ளலாகாது. வண்ணமல்லாத பாடலில் இவ்வாறு வருவதே வண்ணவெதுகையாம்.
(503)
105.இவ்வகை எதுகையில் யாதும் இல்லெனில்
 செவ்விய கவிகளும் சீர்அழிவு உறுமே.
சிதையாத்தொடை, சிதைவுறுதொடை, ஓசைத்தொடை, இனத்தொடை, அலங்காரத்தொடை, வண்ணத்தொடை என ஆறுவகையாகக்கூறப்பட்ட இவ்வெதுகை வகைகளில் ஏதாவது ஒன்று இடம் பெறாவிட்டால் சிறந்த பொருள்நயம் மிக்க பாடலாயினும் அது தன் தகுதியை இழக்கும் என்றவாறு.
(504)
106.எதுகை இயல்பினை இம்மட்டு அடக்கி
 எவ்வகைக் கவிகளும் நால்வகைத் தாமெனக்
 கூறும்அம் முறையின் குறிப்புரைக் குதுமே.
எதுகை இலக்கணத்தை இத்துடன் நிறைவுசெய்து எல்லாப் பாடல்களும் ஆசு முதலிய நான்கனுள் அடங்கும் எனக் கூறும் அம்முறையைக் குறித்துக் கூறுவாம் என்றவாறு.