அகியனவும் மேலும் புலவர்களால் கூறப்பட்டுள்ள பல சிறப்புகளும் தொன்மையான உலகத்தைப் பாதுகாத்து அருளும் திருமாலுக்கு உரியனவாம் என்றவாறு. |
பாவலர் வகுத்த பல சிறப்பில் அவதார விசேஷங்கள் மூர்த்தி பேதங்கள் முதலியன அடங்கும். (582) |
50. | விரிகடல் தானையும் வெற்பாம் முலைகளும் | | சோலை ஆய சுரிகுழற் பெருக்கும் | | நீதி குன்றா நெடுவேல் மன்னன் | | ஊராம் முகமும் உயர்புவி மகட்கே. |
|
பரந்த கடலாகிய புடவையும், மலைகளாகிய நகில்களும் மலர்ச் சோலைகளாகிய சுருண்ட கூந்தற்காடும், செங்கோல் தவறாது வலிமையுடன் ஆட்சி புரியும் அரசனுடைய தலை நகராகிய முகமும் சிறந்த பண்புகளை உடைய நிலமடந்தைக்கு உரியனவாம் என்றவாறு. |
உரியன என்ற சொல் அவாய் நிலையால் பெறப்பட்டது. (583) |
51. | பொன்னொடு நவமணிப் பொலிவும்நெற் போரும் | | அன்னமும் பாலும் அடலும் ஆக்கமும் | | செந்தா மரைமுதற் செப்புவ பிறவும் | | திருமால் மார்புடைச் செய்யவட்கு உரித்தே. |
|
பொன், நவரத்தினம் ஆகியவற்றின் விளக்கமும், நெல் முதலிய தானியக் களஞ்சியமும், பலவகை உணவுப்பொருள்களும், பசுக்கூட்டங்களும், வலிமையும், நாளுக்கு நான் ஏற்படும் முன்னேற்றமும், செங்கமலம் ஆகிய இருக்கையும் இதுபோல் கூறப்படுவன பிறவும் திருமாலின் மார்பில் விளங்குகின்ற திருமகளுக்கு உரியனவாம் என்றவாறு. |
நெற்போர் உபலட்சணமாகப் பலவகைத் தானியங்களையும், அன்னம் உபலட்சணமாக இன்றியமையாத்தேவைகளான உடை, உறையுள் ஆகிய மற்ற இரண்டினையும், பால் ஆகுபெயராகப் பசுவையும் குறித்து வந்தன. (584) |