அறுவகையிலக்கணம்403
காவிநிறக் கொடி, குடை, தம் சமயநெறிக்கேற்ற மணிமாலை, தம்மால் வணங்கப்படும் தெய்வத்திற்குரிய சின்னங்களுள் ஏற்கத்தக்கன ஆகியன துறவறத்தோர்க்கு உரியன என்றவாறு.
சைவத்துறவியர்க்கு அக்கமணிமாலையும், வைணவருக்குத் துளசிமணி மாலையும், சாக்தேயர்களுக்குப் படிகமாலையும் உரியன. சைவர்கள் திருநீற்றையும், வைணவர்கள் திருமண்காப்பையும் சின்னமாகக் கொள்வர். சிவசின்னம் என்று கூறிப் பாம்புகளையும் மண்டையோடுகளையும் அணிதல் போன்றவைகளை விலக்குவதற்காகச் சின்னங்களுள் கொளத்தகும் பாற்றும் என்றார்.
(589)
57.அரும்மறைக் கொடியும், அம்புய மாலையும்,
 பொன்னிறக் கவிகையும் பூசுரர்க்கு ஆமே.
ஓதுதற்கரிய வேதங்களாகிய கொடியும், தாமரைப்பூ மாலையும், பொன்வண்ணத் தமைந்த குடையும் அந்தணர்க்குரியன என்றவாறு.
(590)
58.செந்நிறக் குடையும், செச்சைமா லிகையும்
 சரபக் கொடியும் தரைஎலாம் புரந்து
 பொரும்அவர்க்கு எமன்ஆம் புரவலர்க்கு உரித்தே.
சிகப்புவண்ணக் கவிகையும், வெட்சிப்பூ மாலையும், சரபப் பறவையின் வடிவம் எழுதப்பட்ட கொடியும் உலகமக்கள் அனைவரையும் பாதுகாத்துத் தம்மோடு போர்புரிபவரை அழிக்கும் வேந்தர்களுக்கு உரியனவாம் என்றவாறு.
(591)
59.முல்லையந் தாரொடு முத்துக் கவிகையும்
 துலைஎனப் பொறித்துள தூசுக் கொடியும்
 வணிகருக்கு ஆம்என வகுப்பது முறையே.
முல்லை மாலை, முத்துக்குடை, தராசின் சின்னம் வரையப்பட்ட துணிக்கொடி ஆகியன வணிகர்களுக்கு உரியன என்று கூறுதல் மரபாகும் என்றவாறு.
(592)