அணியிலக்கணம்404
60.மேழிக் கொடியொடு வெண்ணிறக் குடையும்
 காவி மாலையும் கங்கைசே யினர்க்கே.
கங்கையின் மைந்தர்கள் எனப்படும் வேளாளர்களுக்கு ஏர் வரையப்பட்ட கொடியும் வெள்ளைக் குடையும் குவளைத்தாரும் உரியனவாகும் என்றவாறு.
(593)
61.கருநிறக் குடையொடு காக்கலம் பூவும்
 பன்றிநாய் எழுதிய பதாகையும் பச்சூன்
 சேல்பிணம் ஆதிய தின்பார்க்கு ஆமே.
கருந்துணிக்குடை, கருவிளமலர்மாலை பன்றி நாய் இவைகள் எழுதப்பட்ட கொடி ஆகியன பச்சை இறைச்சி, மீன், இறந்த விலங்குகள் முதலியனவற்றைத் தின்னும் இழிந்தவர்களுக்கு உரியனவாம் என்றவாறு.
(594)
62.வேப்பந் தாரொடு மீன்கொடி வழுதியர்
 கொண்ட முறையே தனித்தனி கொள்வார்க்கு
 அம்முறை கூறுதல் அழகாம் அன்றே.
பாண்டிய மன்னர் வேம்பு மாலையையும், கயற்கொடியையும் சிறப்புச் சின்னங்களாக ஏற்றமைபோலத் தமக்கெனத் தனித்தனிச் சின்னங்களைப் பெற்றவர்களுக்கு அவற்றையே எடுத்துரைப்பது நலமாகும் என்றவாறு.
இம்முறையில் சோழர்களுக்கு ஆத்திமாலை, புலிக்கொடியும், சேரர்களுக்குப் பனைமாலை, விற்கொடியும் கூறுக. பல்லவர்க்கு விடைக்கொடி, சாளுக்கியருக்குப் பன்றிக்கொடி போன்றவையும் இவற்றுள் அடங்கும்.
(595)
63.தனிவேல், சக்கரம், தவளப் பெருங்குடை
 மன்னருக்கு எல்லாம் வகுப்பதும் தகுமே.
எல்லா வேந்தர்களுக்கும் இணையற்ற வேலாயுதம், ஆணைத்திகிரி, வெண்கொற்றக்குடை என்னும் இம்மூன்றையும் பொதுவாகக் கூறினாலும் அமையும் என்றவாறு.
(596)