அறுவகையிலக்கணம்419
படிப்பவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் கூறப்படுவனயாவும் கற்பனையேயாகும் எனக் கருதுகின்ற அறிஞர்கள் எம்மால் பாராட்டத்தக்கவராவர் என்றவாறு.
கற்பனையின் பயன் கற்பவர்க்கு வியப்பு அளிப்பதாகும். இவ்வியப்பே காவியச்சுவையாம். இப்பயனைத் தருவன அனைத்தையும் கற்பனையாகவே கருதலாம் என்ற கருத்து இங்கு கூறப்பட்டது.
(616)
84.கற்பனை நிலைஇவண் கழறினம்; அடுத்துஇனி
 நிகழ்ச்சி இயல்பினை நிகழ்த்துதும் சிறிதே.
கற்பனையின் நிலையை இவ்வாறு கூறிமுடித்தோம். இனித் தொடர்ந்து நிகழ்ச்சிகளின் இயல்புகளைக் கொஞ்சம் கூறுவாம் என்றவாறு.
இந் நூற்பாவால் இப் பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்ததற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படுகிறது.
(617)
IV. நிகழ்ச்சி இயல்பு
இப் பிரிவில் எந்தஎந்தக் காலத்தில் என்னென்ன இயற்கைச் செயல்கள் நடைபெறும் என்பன தொகுத்துரைக்கப்படுகின்றன. சிறுபொழுது, பெரும்பொழுது ஆகிய இரண்டும் இடம்பெறுவதுடன் நல்லாட்சிக்காலம், கொடுங்கோன்மைக் காலம் பற்றியும் கூறப்படுகிறது. இவ்வியல்பு 13 நூற்பாக்களை உடையது.
அதிகாலை
85.வைகறை நிகழ்வன சேவற் றொனியும்,
 காகம் ஆந்தைக் கதறலும், வலியான்
 இசையும், கூகையும் கள்வரும் இருப்பிடம்
 தேடலும், காளையர் சிறுமியர் எனும்இவர்
 பிரிவது கருதிப் பெருமூச் செறிதலும்
 வைதிக நெறியினர் மகிழ்ச்சியும் பிறவுமே.