அறுவகையிலக்கணம்429
97.இவ்வகைத்து ஆகும் இயல்பாம் நிகழ்ச்சியின்
 பகுதியும் கோடையிற் கல்மழை பெய்தல்
 ஆதி ஆய மாறுபடும் நிகழ்ச்சியும்
 அறிவது புலவோர்க்கு ஆன முறையே.
அவ்வக் காலத்தில் இயல்பாக நடைபெறவேண்டிய நிகழ்ச்சிகள் இவைஇவை என்பதனையும், கோடைக்காலத்தில் ஆலங்கட்டி மழை பொழிதல் போன்ற விதிவிலக்கான சிற்சில மாறுபாடுகளையும் தக்கவாறு அறிந்து கோடல் அறிஞர்களுக்குக் கடமை ஆகும் என்றவாறு.
நிகழ்ச்சி இயல் இத்துடன் முற்றுப்பெறுகிறது. இந்நூலாசிரியர் வழக்கப்படி “இவ்வியல்பு முற்றிற்று; அடுத்த இயல்பு உரைப்பாம்” எனக்கூறும் நூற்பா இங்கு இடம் பெறவில்லை.
(630)
V. ஆக்க இயல்பு
யார்யார்க்கு அல்லது எதெதற்கு எதனால் சிறப்புண்டாகும் என இவ்வியல்பில் கூறப்படுகிறது. இப்பிரிவு பன்னிரண்டு நூற்பாக்களை உடையது.
முன் இயல்பின் இறுதி நூற்பாவில் இவ் வியல்புக்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படாமையின் இங்கு முதல் சூத்திரம் அவ்வாறு அமைகிறது.
98.அணியினுக்கு அணியாம் ஆக்கம் கூறுதற்கு
 அமையா; ஆயினும் அறைகுதும் சிறிதே.
செய்யுள் அலங்காரத்திற்கு அழகு தருவதாகிய சிறப்பியல்புகள் இன்னின்னவை என முற்றிலும் சொல்ல முடியாது. (இதனை நன்கு உணர்ந்திருந்தும் உதாரணம் காட்டுதல் போலச்) சிலவற்றின் சிறப்பியல்புகளைக் கூறுவாம் என்றவாறு.
ஒரு பொருளின் சிறப்பு யாது என நன்குணர்ந்த பிறகே அப் பொருளை உவமையாகவும் கற்பனையாகவும் ஆள முடியும். எனவே இந்நூற்பாவில் “அணியினுக்கு அணியாம் ஆக்கம்” என்றார். முதலது செய்யுளணியியல்; மற்றது அழகு.