108. | வாவிக்கு ஆக்கம் வனசமும் குவளையும்; | | கோவிற்கு ஆக்கம் குலவு கோபுரம்; | | நாவிற்கு ஆக்கம் நன்மொழி உரைத்தல்; | | பூவிற்கு ஆக்கம் பொலிநறை வண்டுஎன | | விரியாது அடக்கினம் ஆயினும் வியன்தமிழ் | | உரிமை யாளர் உணர்வது கடனே. |
|
“குளத்திற்குச் சிறப்புத்தருவது தாமரையும் நீலமும் ஆகும்; ஆலயத்திற்குப் பெருமை சேர்ப்பது இராசகோபுரம் ஆகும்; நலத்தைத் தருகின்ற இனிய மொழிகளைப் பேசுதல் நாவிற்குச் சிறப்பாம்; மலர்களுக்குத் தேனின் நிறைவும் வண்டுகளின் சேர்க்கையும் எழில் தருவனவாம்” என்றெல்லாம் மிக விரித்துப் பெருக்கமால் இவ்வியல்பை இத்துடன் முடித்துக் கொள்கிறோம். எனினும் பெருமை மிக்க தமிழுக்கு உரிய மாணவர்கள் இவற்றை எல்லாம் வல்லார்வாய்க் கேட்டறிவது இன்றியமையாததாம் என்றவாறு. |
“குளத்துக்கு அணிஎன்ப தாமரை’1 நாவை உடையவனின் சிறப்பு நாவின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. “பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி”2 என்பது தமிழ்மறை. பொலிநறை-வினைத்தொகை. நறைவண்டு-உம்மைத்தொகை. |
தமிழ் உரிமையாளர் என்றது அம்மொழியை எடுத்து ஆள விரும்புபவர்களை. (641) |
109. | ஐந்தாம் இலக்கணம் ஆகும் அணிமுடித்து | | ஆறாம் இலக்கணத்து ஆவல்கூர்ந் தனமே. |
|
ஐந்தாவது இலக்கணம் ஆகிய அணியை இத்துடன் நிறைவு செய்து அடுத்து ஆறாவதாகிய புலமை இலக்கணத்தை எடுத்துக்கூற விழைகின்றோம் என்றவாறு. |
இந் நூற்பாவுடன் அணி இலக்கணம் நிறைவு செய்யப்படுகிறது. (642) |
ஆக்க இயல்பு முற்றிற்று |
அணியிலக்கணம் முற்றிற்று |
ஆகச்சூத்திரம் 642. |
|