புலமையிலக்கணம்448
(எழுத்துச்சொற் புணர்ச்சி, சொற்களின் தெளிவான பொருள், பொருள் கோள் முறைகள், யாப்பின் ஓசை நயம், இலக்கிய மரபு, அணிகளின் அமைப்பு ஆகிய இன்றியமையாத விஷயங்களில்) சற்றும் ஐயமில்லாத தெளிவு பிறப்பதற்கு முன்னாலேயே யமகம், திரிபு போன்ற மிறைக்கவிகளை இயற்றத் தொடங்கினால் அவை செவ்வனே அமையாததோடு இயல்பான பாடல்களையும் எழிலுற யாக்க முடியாமற் போய்விடும் என்றவாறு.
முதலில் ஆற்றொழுக்கான பாடல்களைப் பாடிப்பாடி நன்கு தேர்ச்சியடைந்த பிறகே சித்திரகவிகளில் சிந்தை செலுத்தவேண்டும் என்கிறார். அங்ஙனம் செய்யாவிடின் மிறைக்கவிகளில் வேறு வழியின்றிக் கைக்கொள்ள வேண்டியுள்ள விகாரம், போலி, வலியப்பொருள்கோள் போன்றனவற்றை இயல்பான செய்யுளிடத்தும் புகுத்தி அதன் பொலிவை அழித்துவிட நேரும்.
இந் நூற்பா தொடங்கி 11 நூற்பாக்களால் கவிஞனாக விரும்பும் ஒரு மாணவன் கைக்கொள்ளவேண்டிய நெறிமுறைகள் வகுத்துக் கூறப்படுகின்றன.
(656)
15.குரவன் கடைவரி கொடுக்க வாங்கி
 மற்றைய மூன்று வரிகளும் பாடி
 அவன்எழுத் தாணி அவற்றைத் திருத்தல்(க்)
 கண்டு தேறுநன் கவிநயம் உறுமே.
போதகாசிரியன் ஈற்றடியைக் கொடுக்க மாணவன் மற்ற மூன்று அடிகளையும் நிறைவுசெய் வேண்டும். இவ்வாறு முற்றுப்பெற்ற பாடலை ஆசிரியன் மாணவனின் எதிரில் திருத்த வேண்டும். இம்முறையிலேயே தேர்ச்சி பெறுபவனின் செய்யுள் குற்றமற்றதாகவும் அழகுடையதாகவும் அமையும் என்றவாறு.
ஆசிரியன் மாணவனின் அறிவுநிலை அறிந்து ஈற்றடி தருவார். எனவே மாணவன் அதனை முற்றுவித்தால் எளிதாகும் (பிறர் தரும் ஈற்றடி சமுத்தி எனப்படும்) மாணவனின் பாடல்களை ஆசிரியர் திருத்தும்போது அவற்றிலுள்ள வழுக்களை