26. பூவிற் றிருவைப் புணர்தலிற் பொன்முடி பூண்கடகம்
மேவப் படுதலின் வெண்சங்க மாழி விரும்புதலிற்
காவற் கடவுளைக் கார்முகில் வண்ணனைக் காசினியோர்
பாவுக்கு முன்னே 1பகருவர் காப்பாப் பணிமொழியே.

     (உரை I.) எ - ன், பூவிற்றிருவைப் புணர்தலானும், முடியும்
பூணும் கடகமும் முதலாயினவும் அணிதலானும், சங்கு சக்கரம்
தரித்தலானும், காவற்றொழிலன் ஆகையானும், (பூமி தேவியைப்
பொருந்துதலானும்) கருமுகில் வண்ணனைக் காசினியுள்ளோர்
காப்புக்கு முன்னாக மொழியவேண்டும் எ - று.

என்னை.

“காப்பு முதலெடுக்குங் கடவு டானே
பூக்கமழ் துழாய்முடி புனைந்தன னாகும்”

என்பது பருணர் பாட்டியல்.

     (உரை II). மேகம் போன்ற திருமேனியையுடைய
நாராயணனைப் பிள்ளைத் தமிழுக்கு முன் காப்புக் கவியில்
வைத்துப் பாடுக.

     அந்த நாராயணனே முடிபுனைந்த மன்னற்குச் சமமாக உவமை
வைத்துப்பாடற்கும் உரியவனாகும். தேவர்களை மானிடருடன்
சமமாக வைத்துப் பாடுவதற்குப் பூவைநிலை என்று பேராம். இப்படிப்
பாடுவது இருபத்தைந்து வயசுக்கு மேற்பட்டு முப்பது வயசுக்கு
உட்பட்ட முடிபுனைந்த மன்னற்காம். முப்பது வயசுக்கு மேற்பட்ட
மன்னருக்கு ஆகாது எ - று.

     (கு - ரை). பூவை நிலை ; ‘ஒருவனை அவனோடு
(மாயவனோடு) உவமை கூறினும், பிற கடவுளரோடு உவமை கூறினும்
அதுவேயாம்’ (பு. வெ. 92, உரை.)


     (பி - ம்.) 1 ‘பகர்குவர்’ (1)