4. +பொருள்தெரி யாமை சிறப்பின்றி நிற்றல்
                             பொருள்பலவாய்
வருமொழி யாதல் வகையுளி சேர்தல் வருஞ்சீருடன்
முரிதரு மீறுடைத் தாத லெடுத்தவச் சீர்செய்யுமேல்
சரிவளை யாயவை தாமமை யாவென்று சாற்றுவரே.


     (உரை I). எ - ன், எடுத்த முதற்சீர்க்கு வரும் இழுக்கிவை
வாராம லியம்புக எ - று.

     எடுத்த முதற்சீர்ப் பொருள் புலப்படாதொழியினும், சிறப்புடைய
மங்கலச் சொல்லின்றி மொழியினும், துணிந்து ஒரு பொருளினைச்
சொல்லாது பல பொருளாகத் தோன்றி நிற்பினும், சொல்லிறுதி
யிலதான வகையுளி யோசையிடினும், முதற்சீரின் ஈற்றெழுத்தும்
வருஞ்சீரின் முதலெழுத்தும் சந்தி வகையால் திரியினும், இவ்வழுவுள்
யாதானுமொன்று அங்கு வரினும் ஆனந்தம் எ - று.

     (கு - ரை) முரிதல் - இங்கே திரிதல். முதன்மொழிக்கு வரும்
இழுக்கை வெண்பாப் பாட்டியல் பின்வருமாறு கூறுகிறது :

     ‘வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல், தொகையார்
பொருள் பலவாத் தோன்றல் - தகையில் பொருளின்மை ஈறு
திரிதலே போல்வ, தருமுதற்சீர்ச் சொற்காகுந் தப்பு’. வகையுளி :
பொருள் நோக்காது இசைநோக்கி அடுத்துள்ள இருசீர்களில் ஒரு
சொல் நிற்குமாறு கூறுதல். (4)


+இக்குறியுள்ள சூத்திரங்கள் உரை II பிரதியில் இல்லை.