இதுவுமது

   
63. பொன்முடி சூடல் பொழில்விளை யாடல் புனலாடுதல் நன்மணஞ் செய்தல் நறவூண் களிப்புக் கலவிதுனி
மன்னும் புதல்வர்ப் பெறுதனன் மந்திரத் தூதுசெல்லல்
1இன்னிகல் வென்றி வகைசந்தி கூறலிக் காப்பியமே.

     (உரை I). (இ - ள்). முடி சூடுதல், பொழில் விளையாடுதல்,
புனலாடுதல், நன்மணம் புணர்தல், மதுவுண்டு களித்தல், பொருந்திய
கலவி, துனி, புதல்வரைப் பெறுதல் [வாது செய்தல்], அரச நீதியாகிய
மந்திரம், தூது, செலவு, செரு, வென்றி, சந்தியனெ்பவற்றைச்
சாற்றுதலும் காவிய நடை எ - று.

     (உரை II). எ - து, ஒரு நகருக்கு ஒரு தலைமகன் சோம
சூரியர் மரபில் க்ஷத்திரியனாகவும் நீதிதவறாதவனாகவும் இருப்பானுக்கு
முடி சூட்டுதலும், தலை மகனும் தலைமகளுங்கூடி மணம் புணர்தலும்,
சோலைப்புறத்தே விளையாடலும், நீர் விளையாடலும், கலவியிற்
களித்தலும், புலவியின் ஊடலும், களிமயங்குறுதலும், வனப்புறு
காட்சியும், மந்திரமிருத்தலும், தூது விடுத்தலும், பொருள்வயிற்
பிரிதலும், வினைவயிற் பிரிதலும், ஓதற் பிரிதலும், காவற் பிரிதலும்,
உற்றுழிப் பிரிதலும், செவ்வணி விடுத்தலும், கருவணி விடுத்தலும்,
வெள்ளணி விடுத்தலும், சிறுவரைப் பெறுதலும் மனை வாழ்க்கை
நீங்கித் துறவில் தவம் புரிதலும், இகல், வென்றியும் பாடிச்
சருக்கமிலம்பக முதலானவை இடையிடையே வர இவ்வகையே
பாடுவது - அறம் முதல் நான்கும் தழுவி வரம் பழியாது
வரப்பாடுவது பெருங்காப்பியம் எ - று.

     (கு - ரை). மந்திரம் - மந்திராலோசனை. சந்தி - நாடக
உறுப்புக்களில் ஒன்று; இங்கே அது காவிய உறுப்பை உணர்த்த
நின்றது ; சந்தி, உபலட்சணத்தால் வித்து, முளை, தழைத்தல், விளைவு,
துய்த்தல் என அவற்றின் இனங்களையும் உணர்த்தி நின்றது.
இவற்றின் இலக்கண விரிவை. சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார்
உரையிற் காண்க. பெருகாப்பிய இலக்கணத்தைத்
தண்டியலங்காரத்திற் காண்க. பெருங்காப்பிய வருணனைகள் 18
என்றும் அவை அஷ்டாதசவன்னனைகள் எனப்படுமென்றும்
தமிழ்விடுதூது, மாறனலங்காரம முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன.


     (பி - ம்.) 1 ‘கன்னிவென் றிச்சந்தி யின்வகை கூறுதல்
காவியமே’ (38)