பக்கம் எண் :

மூலமும் உரையும் 53

மழைக்குறி
கொச்சகக் கலிப்பா

34. முத்திதர வந்ததிரு முக்கூடல் மாதவர்தாட்
பத்திமற வாதபண்ணைப் பட்சேரிப் பள்ளரெல்லாம்
புத்தியுடன் தெய்வநிலை போற்றியபின் வானமுகில்
எத்திசையும் பெய்யமழை யின்குறியுண் டாகியதே.

(இ - ள்.) உயிர்களுக்கு முத்தி கொடுக்கும் பொருட்டுத் தோன்றியருளி வந்த திருமுக்கூடலிலிருக்குந் திருமகள் தலைவனாகிய திருமாலின் திருவடிமேல் வைத்த பற்று மறவாத பண்ணையைச் சார்ந்த பள்ளர்களெல்லாம் அறிவுடன் தெய்வநிலை போற்றிய பின்பு வானத்திலியங்கும் மேகம் எல்லாத் திசையிலும் மழையைப்பொழிய இனிய அறிகுறி உண்டாகியது; (எ-று. )

(வி - ம். ) மாதவர்-திருமகள் தலைவன். ‘மாலழகர் பத்தி மறவாத’ என்றும் ‘வாழ் முகிலே’ என்றும், ‘பெய்ய மழையெனக்குறி’ என்றும் பாடங்கள் உண்டு.

(34)

சிந்து
இராகம்: ஆனந்தபைரவி. தாளம்: அடதாளம்.

35. ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்று தேகுறி- மலை
      யாள மின்னல் ஈழமின்னல்
      சூழமின்னுதே
நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே-கேணி
      நீர்ப்படு சொறித்த வளை
      கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றில்வளை
ஏற்றடைக்கு தே-மழை
      தேடியொரு கோடி வானம்
      பாடி யாடுதே