83. கோடல் - வெண்கோடற்பூ, கைதை - தாழம்பூ, கொங்கு முதிர் நறு வழை - தாதுமுதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ, 84. காஞ்சி - காஞ்சிப்பூ, மணி குலை கள் கமழ் நெய்தல் - நீலமணிபோலுங் கொத்துக்களையுடைய தேனாறும் கருங்குவளை, 85. பாங்கர் - 1ஓமை, மராஅம் - மரவம்பூ (வெண்கடம்பு), பல் பூ தணக்கம் - பல பூக்களையுடைய தணக்கம்பூ, 86. ஈங்கை - இண்டம்பூ, இலவம் - இலவம்பூ, தூங்கு இணர் கொன்றை - தூங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ, 87. 2அடும்பு - அடும்பம்பூ, அமர் ஆத்தி - பொருந்தின ஆத்திப்பூ, நெடு கொடி அவரை - நெடிய கொடியினையுடைய அவரைப்பூ, 88. பகன்றை - பகன்றைப்பூ, இது சிவதை ; 3" பகன்றைப்பூ வுறநீண்ட பாசிலைத் தாமரை" என்புழி வெள்ளிவட்டில் உவமைகோடலின், இது கிலுகிலுப்பையன்று. பலாசம் - பலாசம்பூ, பல் பூ பிண்டி - பல பூக்களையுடைய அசோகம்பூ, 89. வஞ்சி - வஞ்சிப்பூ, பித்திகம் - பிச்சிப்பூ, சிந்துவாரம் - கருநொச்சிப்பூ, 90. தும்பை - தும்பைப்பூ, துழாஅய் - திருத்துழாய்ப்பூ, சுடர்பூ தோன்றி - 4விளக்குப்போலும் பூவினையுடைய தோன்றிப்பூ,
1ஓமை - பாலைநிலத்திற்குரிய ஒருவகை மரம். பாங்கரென்று ஒரு வகையான கொடியும் உண்டு ; "பாங்கருமுல்லையுந் தாய பாட்டங்கால் - பாங்கர்க்கொடியும் முல்லைக்கொடியும் பரந்த தோட்டத்திடத்தே" (கலித். 111:3-4, ந.) 2அடும்பு - நெய்தல் நிலத்திற்குரிய ஒருவகைக் கொடி. 3கலித். 73:2. இதன் உரையில் நச்சினார்க்கினியர் பகன் றைப்பூவை, ‘மணமில்லாத பகன்றைப்பூ' எனக் குறிப்பிடுவர் ; பகன்றை யென்பது பெருங்கையாலென்னுங் கொடியென்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 13:155-60, உரை) ; இது மருதநிலத்துக்குரியதென்று தெரிகிறது. 4தோன்றி - செங்காந்தள் ; "ஒண்சுடர்த் தோன்றி" (ஐங்.)
|