இது மேலேகட்டின கொடி. 109. பல் வயின் - பலவிடங்கடோறும், 110. வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ - வெள்ளியை யொத்த விளங்குகின்ற சாந்தை வாரி, 111. மணி கண்டன்ன மா திரள் திண் காழ் -நீலமணியைக்கண்டாற்போன்ற கருமையினையும் திரட்சியினையுமுடைய திண்ணிய தூண்களையுடையவாய், 112. செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடு சுவர் - செம்பினாலே பண்ணினாலொத்த தொழில்கள் செய்தலுற்ற நெடிய சுவரிலே, 113. உருவம் பல் பூ ஒரு கொடி வளைஇ - வடிவழகினையுடையவாகிய பலபூக்களையுடைய 1வல்லிசாதியாகிய ஒப்பில்லாத கொடியையெழுதி, 114. கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் - புதைத்தகருவோடே பெயர்பெற்ற காட்சிக்கினிய நன்றாகிய இல், என்றது, கருப்பக்கிருகமென்றவாறு. திண்காழையுடையவாய்ச் (111) செய்வுறுநெடுஞ்சுவரிலே (112) விளங்குஞ் சுதையுரீஇப் (110) பல்வயின் (109) ஒருகொடிவளைஇ (113) வரைகண்டன்ன தோன்றலவாய்க் (108) கொடியவாய்ப் (109) பாயிருணீங்க (105) எரி (103) அமைவரப்பண்ணிக் (104) காட்சிக்கினியவாகிய நல்லில் (114) என முடிக்க. கோயில் (100) வரைப்பின் (107) காண்பினல்லில் (114) என முடிக்க. 115. [தசநான் கெய்திய ;] நான்கு தசம் எய்திய - நாற்பதிற்றியாண்டு சென்ற, பணை மருள் நோன் தாள் - முரசென்று மருளும் வலியகால்களையும், 116. [இகன்மீக் கூறு மேந்தெழில் வரிநுதல் :] ஏந்து எழில் வரி நுதல் - உயர்ந்த அழகினையும் புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய நாகம் (117), இகல் மீ கூறும் நாகம் (117) - போரில் மேலாகச்சொல்லும் நாகம், 117. பொருது ஒழி நாகம் - பொருது பட்ட யானையினுடைய, 117 - 8. [ ஒழியெயி றருகெறிந்து, சீருஞ் செம்மையு மொப்ப ;] ஒழி எயிறு சீரும் செம்மையும் ஒப்ப அருகு எறிந்து - தானேவீழ்ந்த கொம்பைக் கனமும் செம்மையுமொப்ப இரண்டுபுறத்தையுஞ்செத்தி,
1இக் கொடிகளை வல்லிசாதியென்றே குறிப்பிடுவர் தக்கயாகப் பரணி யுரையாசிரியர். துகிற்கொடியை விலக்குவதற்காக இவ்வாறு இவர்கள் கூறுகின்றார்கள் போலும்.
|