குறுந்தொகை


xxi


  
உதவிய அன்பர்கள்

    இந்நூலை ஆராய்ந்து வந்த காலங்களிலும் பதிப்பித்த காலத்திலும் பல அன்பர்களுடைய உதவியைப் பெற்றிருக்கின்றேன். அவர்களுள் முக்கியமானவர்கள் என்னுடைய இளைய சகோதரர் சிரஞ்சீவி வே. சுந்தரேசையரும், சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி. மு. சுப்பிரமணிய ஐயரும், சிரஞ்சீவி வித்துவான் கி.வா. ஜகந்நாதையரும் ஆவர்.

    முன்பு குறிப்பிட்ட என் பிராய முதிர்ச்சியாலும் சரீரத் தளர்ச்சி முதலியவற்றாலும் முன்பு போல எந்தக் காரியத்தையும் நான் கருதியபடி தனியே இருந்து நிறைவேற்ற இயலவில்லை. ஆயினும் தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தலில் உள்ள ஆவல் இன்னும் தணியவில்லை. தமிழ்த்தெய்வமே அவ்வப்பொழுது என் கவலையை நீக்கி வருவதாக எண்ணுகின்றேன். கலா நிலையமாகிய சென்னைச் சர்வகலாசாலையாருடைய பேராதரவால் வெளிவரும் இந்நூற் பதிப்பு, தமிழன்பர்கள் எதிர்பார்க்கிறபடி திருப்திகரமாக அமைய வேண்டுமே என்ற கவலை எனக்கு உண்டு. இச்சமயத்தில் மேற்கூறிய வித்துவான் சிரஞ்சீவி கி.வா. ஜகந்நாதையர் இந்நூலுக்கு நான் பல வருஷங்களாக எழுதியும் தொகுத்தும் வைத்துள்ள பல வகையான ஆராய்ச்சிக் குறிப்புக்களை எல்லாம் என் கருத்துக்கிணங்க முறைப்படுத்தி நல்ல வடிவத்தில் அழகு பெற அமைப்பதில் பெரிதும் துணை புரிந்தார். அவருடைய பேராற்றலையும் எழுதும் வன்மையையும் தமிழ் அன்பையும் என் மனமாரப் பாராட்டுகின்றேன். அவருக்கு எல்லா நன்மைகளையும் அளித்தருளும் வண்ணம் தோன்றாத் துணையாக நிற்கும் முழுமுதற் கடவுளை இறைஞ்சுகின்றேன்.

    பல வருஷங்களாக முயன்று படித்துப் பலருடைய உதவியைப் பெற்று ஆராய்ந்து ஆராய்ந்து சுவைத்துப் பார்த்த இந்நூல் இப்பொழுது இந்த உருவத்தில் வெளி வருவதைப் பார்க்கையில் எனக்கு உண்டாகும் இன்பம் எழுதி உணர்த்தற்கரியது. தமிழ் அன்னையின் திருவடித் துணைகளில் இப்பதிப்பும் ஒரு மணமற்ற சிறு மலராகவேனும் கிடந்து நிலவும் என்பது எனது கருத்து.

    எனக்குள்ள பல வகையான குறைகளால் இப்பதிப்பில் பல பிழைகள் நேர்ந்திருத்தல் கூடும். அவற்றை அன்பர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்று எண்ணுகிறேன். இம் முயற்சியை நிறைவேற்றி வைத்த திருவருளை வழுத்தி வாழ்த்துகின்றேன்.


“தியாகராஜ விலாசம்”
 திருவேட்டீசுவரன் பேட்டை                             இங்ஙனம்,
 12-8-1937                                         வே. சாமிநாதையர்