கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன. ஒவ்வொரு பருவத்திலும் இன்ன இன்ன மலர்கள் மலரும், இன்ன இன்ன விலங்குகள் இன்ன இன்ன நிலையை அடையும் என்பன போன்ற பல செய்திகள் உள்ளன. அவை புலவர்களுடைய நுண்ணறிவை வெளிப்படுத்தும்.
பெரும்பொழுது
கார்
ஆவணி, புரட்டாசி மாதங்கள் கார் காலமாகும். இது முல்லைக்குரியது. கார்காலத்து மாலையில் மேகங்கள் அடர்ந்து மின்னி முழங்கி மழை பெய்கின்றன; அம் மழையினால் முல்லை நிலம் வளம் பெறுகின்றது; முல்லை மலர்ந்து மணக்கின்றது; பீர்க்கம்பூ விரிந்து பொன்னையும் பசலையையும் நினைப்பூட்டுகின்றது. கொன்றையும் குருந்தும் முகை யவிழ்கின்றன; ஆண்மான் பிணையோடு தனக்கினிய பசிய அறுகம்புல்லை வயிறார உண்டு பரல் நிறைந்த பள்ளத்தில் உள்ள தெளிந்த நீரை அருந்தித் துள்ளுகின்றது.
மழையைக் கண்டு புலவர்கள் அடையும் ஆனந்தமும், அதனைப் புகழும் அழகும், தலைவிக்கு அதன்பால் உண்டாகும் பகைமையைப் புனைந்து காட்டும் இயல்பும் படித்துணர்ந்து இன்புறற்குரியன.
கூதிர்
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் கூதிர்க் காலம். இப்பருவத்தில் குளிர் காற்று வீசும்; மழை பெய்த பின்பு எஞ்சிய துளிகளை மேகம் துளிக்கும்; அதனைச் சில்பெயல் என்பர். இப்பருவத்தில் கரும்பு பொதியவிழும்; ஈங்கைக்கொடி மலரும். கூதிர்ப் பருவத்தில் வீசும் வாடையின் குளிரினால் மக்கள் நடுங்குவர்; விலங்குகளும் பறவைகளும் துன்புறும். இக்காலத்தில் தலைவரோடு இருத்தலைத் தலைவியர் விரும்புவர்.
முன்பனி
மார்கழி, தை மாதங்கள் முன்பனிப் பருவமாகும். இதனை அற்சிரம் என்றும், அச்சிரம் என்றும் வழங்குவர். இக் காலத்தில் வடகாற்று சிறிது வீசும். பனித் திவலை தண்ணென வீசும். மக்கள் வெந்நீரை உண்பதில் விருப்பம் உடையராவர். அவரை மலரும்; உழுந்தும் பயறும் முதிரும்.
பின்பனி
மாசி, பங்குனி மாதங்கள் இப்பருவமாகும். “பின்பனிக் கடை நாள் தண்பனி யச்சிரம்” என்று இப்பருவத்தை ஒரு புலவர் குறிக்கின்றார். தண்ணிய பனித் துளியைக் காற்று வீசும்