குறுந்தொகை


xlii


குளவி

     மலை மல்லிகையைக் குளவி என்பர். காட்டு மல்லிகையையும் அங்ஙனம் கூறுவதுண்டு. இது பெரும்பாலும் குறிஞ்சி நிலத்திலும் சிறுபான்மை பாலை நிலத்திலும் காணப்படும். குறிஞ்சி நிலத்தில் மலரோடு முளைத்த இதனை மலைவாணர் களையாகக் களைந்தெறிவர். பாலை நிலத்தில் நீருள்ள சிறு பள்ளங்களுக்கு அருகில் இது வளரும்; இதன் மலர் அந்நீரில் விழுந்து அழுகியிருக்கும். நறுமணம் உடைய இதன் மலரைத் தலைவியின் நுதல் மணத்திற்கு உவமை ஆக்குவர். இதன் இலைகள் பெரியனவாக இருக்கும்.

  
குறிஞ்சி

    குறிஞ்சி நிலத்திற்கு அடையாளமாக விளங்குவது இது. இதன் தண்டு கரிய நிறமாக இருக்கும். இதன் மலரில் தேன் மிகுதியாக உண்டு. இம்மலர் பல வருஷங்களுக்கு ஒரு முறை மலர்வதென்று கூறுகின்றனர்.

  
குன்றி

    இது கொடி வகையுள் ஒன்று. இதன் வித்தை மணி என்பர். அது சிவப்பு நிறம் உடையதாதலின் முருகனது செந்நிற ஆடைக்கு உவமையாகக் கூறப்படுகின்றது.

  
கூதளி

    கூதளம், கூதாளமெனவும் இது வழங்கும். மலைச்சாரலில் வளர்வது. இதன் காம்பு குறியது. இதன் மலர் உட்டுளையை உடையது. கார்காலத்தில் மலர்வது. கைவளைக்கு அம்மலர் உவமிக்கப்படுகின்றது.

  
கொறுக்காந்தட்டை

     இது கொறுக்கைச்சி என வழக்கிலும், எருவை எனச் செய்யுளிலும் ஆளப்படும். அருவியுள்ள இடங்களில் வளர்வது இது. இதனை யானை உணவாகக் கொள்ளுமென்று தெரிகின்றது.

  
கொன்றை

    முல்லை நிலத்துக்குரிய மரங்களுள் ஒன்று இது. கார்காலத்தில் மலர்வது. முல்லை நிலத்தினர் இதன் மலர்கண்டு கார்காலம் வந்ததை அறிந்து கொள்வர். இது மாலைபோல மலர்வதாதலின் இதன் பூங்கொத்து, “கொடியிணர்” என்று சிறப்பிக்கப்படும். இதன் மலர் மஞ்சள் நிறமுடையதாதலின் பொன்னுக்கும், பொன்னரி மாலைக்கும், பொற்காசிற்கும், கிண்கிணிக் காசிற்கும், பசலைக்கும் ஒப்பாகச் சொல்லப்படும். குருந்தும் கொன்றையும் ஒருங்கு சேர்த்துக் கூறப்படும்.