குறுந்தொகை


xliii


    குழி நிறையக் கொன்றை மலர் விழுந்திருப்ப, அக்குழிக்குச் செல்வர்களுடைய மூடி திறந்த பொன்பெய் பேழையைப் பேயனென்னும் புலவர் உவமை கூறுகின்றார்.

  
கோங்கு

     பாலை நிலத்திற்குரிய மரம் இது; இலவின் வகையைச் சார்ந்தது; இளவேனிலில் மலர்வது. இது மலர்கின்ற காலத்தில் இதன் இலைகள் எல்லாம் உதிர்ந்து விடும். இலையில்லாத சினையில் வண்டு ஆர்க்கும். இதன் அரும்புக்கு மகளிரது நகிலை ஒப்பிடுவர்.

  
சந்தன மரம்

     குறிஞ்சி நிலத்துக்குரியது. பொதியின்மலைச் சந்தனமும் முள்ளூர்க் கானத்துச் சந்தனமும் இந்நூலில் சிறப்பிக்கப் பெறுகின்றன. சந்தனம் வேனிற் காலத்தில் தண்ணிதாக இருக்கும். தலைவன் மலைச் செஞ்சந்தனக் குழம்பை அணிந்து இரவில் தலைவி வாழும் இடத்திற்கு வருதலை ஒரு புலவர் சொல்லுகின்றார். மகளிர் சந்தனப்புகையைக் கூந்தலுக்கு ஊட்டுவது வழக்கம்.

  
சிலை
    

குறிஞ்சி நிலத்து மர வகைகளில் இதுவும் ஒன்றென்று தெரிகின்றது. மிக்க வலிமையும் நெகிழ்ச்சியும் உடையதாதலின் இதனால் வில்லை அமைத்து வேட்டுவர் வேட்டை ஆடுவர். சிலை அமைத்தற்குச் சிறந்ததாதலின் இப்பெயர் பெற்றது போலும்.

  
சேம்பு

    மலைப்பக்கத்தில் வளரும் ஒருவகைச் சேம்பு இந்நூலிற் சொல்லப்படுகின்றது. இதன் இலை மிகவும் பெரியது. காற்றால் அசையும் அவ்விலைக்குக் களிற்றின் செவியை ஒருவர் உவமிக்கின்றார்.

  
ஞாழல்

    இது நெய்தல் நிலத்துக்குரிய மரம்; கடற்கரை ஓரத்தில் வளர்வதாதலின் இதன் வேரில் நண்டுகள் வளை அமைத்து வாழும். புன்னையும் இம்மரமும் சேர்த்துக் கூறப்படும். இதன் மலர் சிறிய வடிவினது. அது வெண்சிறு கடுகையும் ஆரன்மீன் முட்டையையும் போலத் தோற்றும். அம்மலர் தண்ணிய நறுமணம் உடையது.