குறுந்தொகை


xliv


ஞெமை

     பாலை நிலத்துக்குரிய மரங்களுள் ஒன்று. இம் மரத்தின்மேல் ஆண்பருந்து தன் பெடையோடு சேர்ந்து இன்புற்றிருக்கும் செய்தி ஒரு செய்யுளில் காணப்படும்.

  
தடா

    இது தடவெனவும் வழங்கும். பெரும்பாலும் குறிஞ்சி நிலத்தில் காணப்படும். இம் மரத்தின்கண் அன்றில் கூடுகட்டி வாழும். இது மிக உயர்ந்து வளர்வது.

  
தாமரை

     இக்கொடி மருத நிலத்துக்குரியது. காலையில் மலர்ந்து மாலையில் குவிந்த இதன் மலருள் சிறு வெம்மை இருக்கும்; தலைவியின் மேனி வெம்மைக்கு அவ்வெம்மையை ஒப்பிடுவர். செந்தாமரை மலரை முருகக் கடவுளின் திருவடிக்கும், வெண்தாமரை முகையைக் கொக்கிற்கும், தாமரைத் தாதைத் தேமலுக்கும் புலவர்கள் ஒப்பிடுவர்.

  
தாழை

    கண்டல், கைதை என்னும் பெயர்களால் தாழை வழங்கப்படுகின்றது. நெய்தல் நிலத்திற்குரியது இது; கடற்கரையிலும் கழியின் ஓரத்திலும் வளரும். கழியில் வெள்ளம் மிகும்போது மேலே தோன்றியும் குறையும்போது தாழ்ந்தும் விளங்கும். இத்தாழையைத் தலைவி ஒரு பாற்படாத தன் நெஞ்சிற்கு உவமையாகக் கூறிக் கொள்ளுகின்றாள். இதன் வேரில் வளை அமைத்து நண்டுகள் வாழும். இதற்கு விழுது உண்டு. இதன் முள்ளிலையின் தோற்றம் வாளரத்தையும் மலரின் தோற்றம் கொக்கையும் ஒக்கும். தாழையின் வரிசை வேலை நட்டு வைத்த வேலியைப் போலத் தோற்றும்.

  
தாளி

    தாளியறுகென்பதும் தாளிக் கொடி என்பதும் இப் பெயரால் வழங்கப்படுகின்றன. பசு இதனை மேயும்.

  
தினை

    குறிஞ்சி நிலத்தில் மலைவாணர் மரங்களைச் சுட்டுக் காட்டை அழித்து அந்நிலத்தை உழுது தினையை விதைப்பர். அது வளர்ந்தபின் கானவரும் குறமகளிரும் தினைக் கதிரைக் காவல் புரிவர். பகலிலும் இரவிலும் குறவர் யானை முதலியவற்றைக் கவணால் எறிந்து தினைக் கொல்லையைப் பாதுகாப்பர். பகலில் தலைவி தன் தோழியருடன் இருந்து தினையை உண்ண வரும்