பருத்தி
மலைச் சாரலில் மலைவாணர் தினைப் பயிருக்கு இடையே இதனை வித்தி விளைப்பர். இது பரீஇ எனவும் வழங்கப்படும்.
பலாமரம்
மலைச்சாரலில் வளரும் மரங்களுள் ஒன்று. இதன் சுளை மிக்க மணமுடையது; “பூநாறு பலவுக்கனி” என்று சிறப்பிக்கப் பெறும். வேரில் காய்க்கும் பலவும் உண்டு. அடி முதல் நுனி வரையில் காய்களைக் கொண்ட பலாமரம் ஒன்றை ஒரு புலவர,் “வேரு முதலுங்கோடு மொராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக், கீழ்தாழ்வன்ன வீழ்கோட் பலவு” என்று வருணிக்கின்றார். குரங்குகள் இதன் பழத்தைத் தோண்டி உண்ணும். இதன் இலை அகன்றதாக இருத்தலின், “அகலிலைப் பலவு” எனப்படும். வௌவால் இதன் கனியை விரும்பி மாலைக் காலத்தில் இம்மரங்கள் உள்ள சாரலை அடையும். பலா மரத்தில் வலையை மாட்டிக் குறவன் பழங்களைக் காவல் புரிவான். சிறியதொரு காம்பு பெரிய பழத்தைத் தாங்கி இருப்பதைச் சிற்றுயிருடைய தலைவி பெரியதாகிய காமத்தைத் தாங்குவதற்கு உவமையாகக் காட்டும் செய்யுள் ஒன்று உண்டு.
பலாசு
இக்காலத்தில் புரசென வழங்கும். இது முருக்கின் இனத்தைச் சார்ந்ததாதலின் முருக்கெனவே இந்நூலில் சொல்லப்படுகின்றது. இதன் மலர் செந்நிறம் உடையது. பட்டையை உரித்த இதன் கோலைக் கையில் ஏந்துவது பிரமசாரிகளின் இயல்பு.
பவழம்
இது செந்நிறம் உடையதாதலின் முருகக்கடவுளின் திருமேனியின் நிறத்திற்கு உவமை கூறப்படுகின்றது.
பனை
இம்மரம் நெய்தல் நிலத்துக்குரியது; பெண்ணை, போந்தை எனவும் வழங்கும். நெய்தல் நிலத்து ஊர்களில் பனையடியில் மன்றங்கள் உண்டு. மணல் நிறைந்த இடத்தில் இது வளர்வது. காற்று வீச வீச அம்மணல் மிகுவதனால் இதன் அடி மரம் மறைந்து கொண்டே வரும் காட்சியை ஒரு புலவர் குறித்துள்ளார்.