செந்நாய்
இது பெரும்பாலும் பாலை நிலத்துக்குரியது; சிறுபான்மை குறிஞ்சி நிலத்திலும் காணப்படும். இது விலங்குகளை வேட்டை யாடி உண்டு சிறு பள்ளத்தில் உள்ள நீரை உண்ணும். புலிக்கு இவ்விலங்கு உணவாகும்.
தவளை
தவளையின் வாய் கிண்கிணியின் வாய்க்கு உவமை கூறப்படுகின்றது. இதன் இனமாகிய தேரை சுனையில் வாழ்வது; பகுவாயை உடையது; தட்டைப் பறையைப் போல ஒலிப்பது.
நண்டு
இது ஞெண்டு எனவும் வழங்கப்படும்; கொக்கிற்கு அஞ்சும்; நீர்த்துறைகளிலுள்ள மரங்களின் வேரில் வளை அமைத்துக் கொண்டு வாழும்; அலைகளால் தன்மனை சிதைக்கப்படும் போது வருந்தி ஓடும். இதன் கால்கள் வளைந்து இருக்கும். கடற்கரையில் விளையாடும் மகளிர் இதனை அலைத்து விளையாடுவர். இதற்கு அலவனாட்டுதல் என்று பெயர். நண்டு ஓடும்பொழுது மணலில் கோடுகள் உண்டாகும்; அவை கோலம் செய்தாற்போலத் தோற்றும். பொன்னிறம் உள்ள கோடுகளை உடைய ஒருவகை நண்டு உண்டு.