குறுந்தொகை


lv


தளிரை மேயும். மகளிர் பாறையில் பரப்பிய தினையை அவர்கள் சோர்ந்த சமயம் பார்த்து மந்தி தன் குட்டிகளோடு கவர்ந்து செல்லும் காட்சி ஒன்றை ஒரு புலவர் அமைக்கின்றார்.

    மந்தி தன் குட்டியை அகனுறத் தழுவிக் கொள்ளும். ஆண் குரங்கும் பெண் குரங்கும் ஒன்றனை ஒன்று காதல் செய்து வாழும் வரலாறுகள் சில இதில் காணப்படுகின்றன; தன்னுடைய கணவனாகிய ஆண் குரங்கு இறந்த பிறகு கைம்மை வாழ்க்கையை விரும்பாத பெண் குரங்கு மரமேறவும் தெரியாத இளைய குட்டியைத் தன் இனத்திடத்தே கையடை கொடுத்த பின்னர் உயிரை மாய்த்துக் கொள்ளும் என்பதும், ஆண் குரங்கு மரத்தின் மேல் இருந்து பழங்களை உதிர்ப்பக் கீழிருந்து மந்தியும் குட்டிகளும் அவற்றைக் கைக்கொண்டு தின்னுமென்பதும் இதற்குரிய உதாராணங்களாம். முசுவின் குருளை பாறையில் மயிலீன்ற முட்டையை அதன் அருமை தெரியாமல் உருட்டி விளையாடுவதை ஒருவர் தெரிவிக்கின்றார். மழைக்குக் குரங்கு அஞ்சும். தானும் தலைவனும் பழகும் இடத்தில் குரங்கு சாட்சியாக இருந்ததென்று ஒரு தலைவி பகர்கின்றாள்.

  
செந்நாய்

    இது பெரும்பாலும் பாலை நிலத்துக்குரியது; சிறுபான்மை குறிஞ்சி நிலத்திலும் காணப்படும். இது விலங்குகளை வேட்டை யாடி உண்டு சிறு பள்ளத்தில் உள்ள நீரை உண்ணும். புலிக்கு இவ்விலங்கு உணவாகும்.

  
தவளை

    தவளையின் வாய் கிண்கிணியின் வாய்க்கு உவமை கூறப்படுகின்றது. இதன் இனமாகிய தேரை சுனையில் வாழ்வது; பகுவாயை உடையது; தட்டைப் பறையைப் போல ஒலிப்பது.

  
நண்டு

    இது ஞெண்டு எனவும் வழங்கப்படும்; கொக்கிற்கு அஞ்சும்; நீர்த்துறைகளிலுள்ள மரங்களின் வேரில் வளை அமைத்துக் கொண்டு வாழும்; அலைகளால் தன்மனை சிதைக்கப்படும் போது வருந்தி ஓடும். இதன் கால்கள் வளைந்து இருக்கும். கடற்கரையில் விளையாடும் மகளிர் இதனை அலைத்து விளையாடுவர். இதற்கு அலவனாட்டுதல் என்று பெயர். நண்டு ஓடும்பொழுது மணலில் கோடுகள் உண்டாகும்; அவை கோலம் செய்தாற்போலத் தோற்றும். பொன்னிறம் உள்ள கோடுகளை உடைய ஒருவகை நண்டு உண்டு.